
posted 9th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழில் கூரிய ஆயுதங்கள் மீட்பு - வெளிநாட்டுப் பிரஜை விசாரணையில்
யாழ்ப்பாணம் சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரே ஆயுதங்களை மீட்டதுடன் சந்தேகநபரையும் கைது செய்தனர்.
சுன்னாகம் ஈவினைப் பகுதியில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, எட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் கைதான நபரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் பல்வேறுபட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார், இந்த விவகாரத்துடன் வெளிநாட்டுப் பிரஜைக்கும் தொடர்புள்ளதா? அல்லது வேறு நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)