
posted 28th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத்துவக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
திருகோணமலை மருத்துவமனையில் எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை மருத்துவமனையின் கழிவுகளை எரிக்கும் இயந்திரப் பகுதியின் புகைபோக்கியானது ஒரு வருடத்துக்கு மேலாக உடைந்துள்ள நிலையில் அது திருத்தப்படாமல் அந்தப் பகுதியில் மருத்துவமனைக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இயந்திரத்தினூடாக வெளியேறுகின்ற புகையால் மருத்துவமனை உட்பட அதனை அண்டிய பகுதிகளிலும் வளி மாசடைவதோடு, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், திருகோணமலை கடற்கரையை நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் உட்பட அயலில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுகின்ற ஆபத்து மிகுந்த மருந்துக்கழிவுகள், சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகின்ற உடற்பாகங்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் போன்றவை நேர அட்டவணையின்றி எரிக்கப்படுவதாக தெரியவருகின்றது.
ஆரம்பத்தில் இந்தப் புகையானது கிட்டத்தட்ட 60 அடி உயரமான புகைபோக்கியின் மூலம் மேல் வளிமண்டலம் நோக்கி விடுவிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது 40 அடி உயரமான புகைபோக்கி உடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்யாமல் கழிவுப் பொருட்கள் எரிக்கப்பட்டு வருவதனால் புகையானது சூழலில் பரவி வருகிறது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் புகை மக்களுடைய சுவாசத்திலும் கலக்கிறது. இது தொடர்பாக பலரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை இந்த இயந்திரம் திருத்தம் செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)