
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நயினை அம்மனுக்கு இன்று தேர்
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (20) வியாழக்கிழமை நடைபெற்றது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பெருந்திருவிழா கடந்த 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதில், இன்றைய தினம் தேர்த் திருவிழா நடைபெற்றது.
அதிகாலை 3.30 மணிக்கு ஆயத்தமணி ஒலித்து 4 மணிக்கு காலை பூசையும் அதனைத் தொடர்ந்து அபிஷேகம் ஆரம்பமாகிப் பின்னர், விசேட பூசை, ஸ்தம்ப பூசை நடைபெற்று காலை 7 மணிக்கு வசந்த மண்டப பூசை ஆரம்பமானது.
இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு அம்பாள் தேரில் ஆரோகணித்து வீதியுலா வந்து முற்பகல் 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்துக்கு வந்தது. பிற்பகல் 4 மணிக்கு பச்சை சாத்தி ரத அவரோகணம் நடைபெற்றது.
நாளை (21) வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழா காலை 8 மணிக்கும் நடைபெறும்.
தேர், தீர்த்தத் திருவிழாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் முன்னாயத்த நடவடிக்கைகள், சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)