
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொது வேட்பாளர் நிலைமை சிக்கலானால் நான் போட்டியிடுவேன் - சிவாஜிலிங்கம்

“தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நான் சுயேச்சையாக போட்டியிடுவேன்” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தமுறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் விடயம் பேசப்படுகிறது. எனவே, வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார். அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், நான் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்றார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில், சிவில் சமூகத்துக்கு மக்கள் ஆணையில்லை என்று எம். ஏ. சுமந்திரன் எம். பி கூறியமை தொடர்பில் பதிலளித்த சிவாஜிலிங்கம்,
“அது தவறானது. மக்கள் தங்கள் பிரதிநிதியாகவே பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். இதேநேரம், மக்கள் தமக்கானதை தாமே தெரிவு செய்வார்கள். அவ்வாறு மக்களால் உருவானதே சிவில் சமூகம். அவர்களுக்கும் தமக்கு என்ன தேவை என்பதனை தீர்மானிக்க - சொல்ல முடியும்” என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)