
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழர்களின் தலைவிதியை மாற்ற வந்தவர்கள் நாங்கள்தான்
கிழக்கு மாகாண தமிழ் மக்களின் தலைவிதியை மாற்ற வேண்டும் என்று புறப்பட்ட ஓர் அரசியல் இயக்கம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி. அந்த அடிப்படையில் அம்பாறையிலும், திருகோணமலையிலும் எமது கட்சியை பலப்படுத்தி ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;
கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றினால் மாத்திரமே கல்விப் புலத்தில் உள்ள தேவைகள், நமக்குத் தேவையான ஆளனி பற்றாக் குறையை நிவர்த்தி செய்து பதவி உயர்வுகளைப் பெறலாம்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 600 சிற்றூழியர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. அம்பாறையில் மொட்டில் வந்த முசாரப் என்பவர் 2400 பேரை நியமித்துக்கொண்டனர். தமிழர்களுக்கு யாரும் இல்லை. ஒன்றும் இல்லை.
ஆகவே தான் கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆணையை பெறும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். ஏனெனில் ஏனைய கட்சிகள் இதற்கான திட்டமிடலை மேற்கொள்ளவில்லை. இதற்காகவே இன்று ஆலையடிவேம்புக்கு வருகை தந்துள்ளேன். இதுபோன்ற பாராட்டு நிகழ்வுகளை நடத்தி மக்கள் மனங்களிலும், மாணவர்கள் மனங்களிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)