
posted 19th June 2024
ஜனஸா எரிப்புக்காக முஸ்லிம்களிடம் சபையில் மன்னிப்பு கேட்ட ஜனாதிபதி
கோவிட் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனஸாக்கள் (சடலம்) எரியூட்டப்பட்டமைக்காக அந்த மக்களிடம் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய தனது பாராளுமன்ற உரையில்,
கோவிட் தொற்று பரவல் காலத்தில் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை முதலில், அனைத்து நாடுகளும் நிறுத்தின. அதன் பிறகு, உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இலங்கையில் நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று அந்தக் குழு பரிந்துரைத்தது. உலக சுகாதார நிறுவனம் வேறுபட்ட கருத்தை எடுத்தது.
ஆனால், பின்னர் உயர் நீதிமன்றம் அந்தக் குழுவின் பரிந்துரையை உறுதி செய்தது. எனவே, அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டியேற்பட்டது. அப்போது மாற்று வழி இருக்கவில்லை. ஆனால், இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டன.
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். எனவே, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவ பீடத்துக்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டத்தை இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கொண்டு வரவுள்ளார்.
இந்த காலக்கட்டத்தில், முஸ்லிம் மக்களுக்குப் மனரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால், இறந்த பிறகு அடக்கம் செய்வதை விரும்பும் எனக்கு தெரிந்த இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். எனவே, நடந்ததற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)