
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சைவ சமய தலைவர்களை சந்தித்த அநுரகுமார
எந்தக் குற்றமும் செய்யாத குழந்தைகள், சிறுவர்கள் போரில் கொல்லப்பட்டனர். அவர்கள் உயிரிழந்து இத்தனை வருடங்களாகியும் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப் பிரச்னைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என்று தம்மை சந்தித்த அநுரகுமார திஸநாயக்காவிடம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் சைவ சமயத் தலைவர்கள்.
யாழ்ப்பாணம் வந்த அநுரகுமார திஸநாயக்க நேற்று முன்தினம் செவ்வாய் (11) நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்துக்கு சென்று குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றார். இதன்போது, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு. திருமுருகனும் உடனிருந்தார்.
இதன்போது, நாட்டில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்னையை தீர்க்க ஜே. வி. பி. பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் நீடித்து செல்லும் நிலையில் அதற்கு தீர்வு என்ன என கோரிய போது எனது சகோதரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்தான். எனக்கு அதன் வலி தெரியும். நாம் ஆட்சிக்கு வந்து அதற்கொரு தீர்வை காண்போம் என்று அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பல இடங்களில் சைவ ஆலயங்கள் அழிக்கப்படும் நிலையில் அங்கு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்த நாடு ஒருபோதும் முன்னேறாது என்று சைவ சமயத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
சமயத்தின் பெயரால் சண்டை பிடிக்கக்கூடாது. நாம் ஆட்சிக்கு வந்தால் கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள அழிவடைந்த ஆலயங்களை மீளவும் அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)