
posted 7th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்
கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் இன்று (07) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் எஸ். குமரவேல் மற்றும் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் த. காண்டீபன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனடாதூதுவர் எரிக் வாஸ் கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களைக் கையளித்தார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரண, யாழ். சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன், செந்தில்குமரன், நிவாரண நிறுவன ஸ்தாபகர்.டி. செந்தில்குமரன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் போதனா மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் ஆ. தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி, இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களின் உதவியுடன் நாளாந்தம் 4 நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சேவையை வழங்க முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)