
posted 7th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஈழத்தமிழர் சமஷ்டியை பெற இந்தியா அரணாக வேண்டும் - சிறீதரன்
ஈழத் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் - அடிபணியாததுமான சமஷ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். இதுவே எமது இனத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு. இவ்வாறு இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை (09) பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
நரேந்திர மோடிக்கு சிறீதரன் எம். பி. அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
“தாங்கள் இந்திய மக்களின் மன உணர்வுகளை வென்றிருப்பதன் பிரதிபலிப்பாகவே மக்களவைத் தேர்தலில் பெற்றிருக்கும் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. பாரதத்தின் அரசியல், பொருளாதார, சமூக நலன் சார்ந்து தாங்கள் ஆற்றவிருக்கும் பணிகளின் விளிம்பில் ஈழத்தமிழர்களுக்கும், இந்திய தேசத்துக்கும் இடையே இழையோடியிருக்கும் உறவின் கனதியை உயிர்ப்பிக்க வேண்டிய காலக்கடமையும் தங்களிடத்தே தரப்பட்டிருப்பதாக நாம் உணர்கின்றோம்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் அடிபணியாததுமான சமஷ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்பதே எமது இனத்தின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். அந்தவகையில் தங்களின் அனுசரணையும், அழுத்தமும் இன்றி இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தமக்கு உரித்தான உரிமைகளுடன் வாழும் வாய்ப்பைப் பெறமுடியாதென்பதை நாம் திடமாக நம்புகிறோம்.
போருக்கு பின்னரும் இன, மத அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் எமது மக்களின் ஆட்சி உரிமை மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக எமது கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியத் தரப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் இந்திய மத்திய அரசு தனது முதன்மையான பணிகளை ஆற்ற முன்வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பை எமது இனத்தின் கோரிக்கையாக தங்களிடம் முன்வைக்கிறேன்.
இந்திய தேசத்தின் வரலாற்று பக்கங்களில் தனித்துவம்மிக்க தலைவராக, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் மக்கள் ஆணை பெற்று பாரத பிரதமராக ஆட்சிப் பீடம் ஏறியிருக்கும் தங்களின் பணிகள், இந்திய மற்றும் ஈழ தேசங்களின் நலனுக்கான வரலாற்று பணிகளாய் அமைய வாழ்த்தி நிற்கிறேன் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)