
posted 1st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இராணுவ தேவைக்கு காணிகள்; அளவீடு செய்வது நிறுத்தப்படும்
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்கு பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணிகளை அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ஆளுநர் பி. எச். எம். சாள்ஸ் தலைமையில் நேற்றுவியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் படையினருக்கு காணிகள் சுவீகரிப்பது தொடர்பிலும் இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த செயல்பாட்டை நிறுத்துவது அவசியம் எனவும் கூறினார்.
அத்துடன், பொது மக்களின் காணிகளை படையினருக்கு வழங்க முடியாது. படையினருக்கு காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்வதையும் நிறுத்த வேண்டும். இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து, படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.
மேலும், யாழ். மாவட்டத்தில் படைகளின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் வழிமொழிந்தார்.
இந்தக் கூட்டத்தில் இராணுவம், பொலிஸார், அரச திணைக்கள அதிகாரிகள் அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)