
posted 4th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இரணைமடு நீர்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை வேண்டும்
இரணைமடு நீர்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக்குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது.
ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வருடம் ஒவ்வொரு பிரச்சினை எழுகின்றது.
இந்த நீர்பாசன திட்டத்திற்கான நிரந்தர பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நீர்பாசனத் திணைக்களம் குறிப்பிடுவது போன்று, வான் கதவுகள் திறக்கப்படும்போது அழிவுகளை சந்திப்பவர்களும் உள்வாங்கப்பட வேண்டும். என்ன மன நிலை எல்லாருக்கும் உள்ளது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும்.
இரணைமடுக் குளத்தின் நீர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சென்றடையாது, பரந்துபட்ட மக்களிற்கும் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். வருடம் தோறும் புதிய புதிய பிரச்சினைகள் எழுகின்றது. இதற்கு நீர்பாசன, கமநல சேவைகள் திணைக்களங்களின் ஆலோசனைகளுடன் விவசாயிகளையும் உள்ளடக்கி நிரந்தர பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
இந்த சிறுபோகத்தின் பின்னர் இந்த பிரச்சினைக்கு முறையான பொறிமுறை ஊடாக தீர்மானம் எடுக்க வேண்டும்.
ஒரு சில விவசாயிகள் என்னைச் சந்திக்கும் போது, எமக்கு தண்ணி தந்தால் போதும். ஆனால், சில தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படுகின்றனர் என்று கூறுகின்றனர். ஆனால், முக்கியமாக விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படாமல் உறுப்பினர்களின் விருப்பங்களை முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும்.
இறுதியாக, விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே செல்லாமல், அனைவரும் ஒற்றுமையாக இருந்து முரண்பாடுகள் இல்லாமல் சரியான வழி அமைக்க வேண்டும். மீண்டும் சொல்ல வேண்டியதென்னவென்றால், இவ் விடயத்தில் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு அமைவாக செயற்படாமல், இரணைமடு குளத்தின் கீழான விவசாயத்துக்கு நிரந்தர தீர்வு ஒன்றை வரைய ஒத்துழைப்புத் தரவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)