
posted 17th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஆசிரியர் சேவை சங்கம் ரணிலின் அரசிற்குக் கொடுத்த காலக்கேடு
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றோம். எனவே, ஜனாதிபதி உடனடியாக எமது பிரச்சினைக்குத் தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையிலுள்ள அநேகமான அதிபர், ஆசிரியர்களை கொழும்புக்கு வரவழைத்து நாங்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சு. பிரதீப் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
12 ஆம் திகதி இலங்கை வரலாற்றிலே 101 கல்வி வலயங்களிலும் மிகவும் வெற்றிகரமாக அதிபர், ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு மிக வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 27 வருடங்களாக அதிபர், ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் இருந்தது. நாங்கள் 2001ஆம் ஆண்டு பெரும் போராட்டத்தின் மூலமாக மூன்றில் ஒரு பகுதி சம்பளத்தை 2022ஆம் ஆண்டு பெற்றோம். அதற்குப் பின்பு 2023, 2024 வரவு - செலவுத் திட்டத்தில் ஆசிரியர், அதிபர்களுடைய சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சும் அதுபோல நிதி அமைச்சும் பல பொய்களை கூறியபோதும் எவ்வித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.
நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். பார்த்துக் கொண்டிருந்தோம். அதிபர், ஆசிரியர்களுடைய சம்பள உயர்வை இந்த அரசாங்கம் வழங்கும் என்று. ஆனால், இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது. பல போராட்டங்களை 2023ஆம் ஆண்டு செய்திருந்தோம். அந்த ஜனநாயக நியாயமான போராட்டம் மீது ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் தடியடி கொண்டும் தண்ணீர் தாக்குதலும் ஆசிரியர், அதிபர்கள் மீது மேற்கொண்டார்கள். நாங்கள் பின்னோக்கி செல்லவில்லை ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு நாங்கள் ஒரு எச்சரிக்கையை கொடுத்திருக்கின்றோம். நாங்கள் மீண்டும் நமது போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
விசேடமாக போராட்டம் வடக்கில் 13 வலயங்களிலும் அதேபோன்று கிழக்கில் அனைத்து வலயங்களிலும் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயங்களிலும் அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள்.
நாங்கள் ரணில் அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம். இனிவரும் காலங்களில் அதிபர், ஆசிரியர்களின் போராட்டங்கள் வடக்கு - கிழக்கில் பெரும் முனைப்புடன் வெடிக்கும் என்கின்ற எச்சரிக்கையை கொடுக்கின்றோம்.
எனவே, நாங்கள் இன்னும் அவர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றோம். ஜனாதிபதி உடனடியாக எமது பிரச்னைக்குத் தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையிலுள்ள அநேகமான அதிபர், ஆசிரியர்களை கொழும்புக்கு வரவழைத்து நாங்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)