
posted 17th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அம்பாறை மாவட்டத்தில் தியாகிகள் தினம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 ஆவது தியாகிகள் தினம் அம்பாறை மாவட்த்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன் கிழமை பரவலாக அனுஷ்டிக்கப்படவிருகின்றது.
இம்முறைதியாகிகள் தினநிகழ்வுகள் பெரும்பாலும் பெரு நிகழ்வுகளாக இடம்பெறாது உணர்வு பூர்வமாகவும், அமைதியான முறையிலும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணிய நாதன் (கரன்) தெரிவித்தார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 19 ஆம் திகதி தியாகிகள் தினத்தை ஈழப் போராட்டத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை தலைமையேற்று வழி நடத்திய செயலாளர் நாயகமும், தென்னிலங்கை மற்றும் சர்வதேச முற்போக்கு இடதுசாரி சக்திகளுடன் உறவுகளைப் பேணிவந்த மக்கள் நேய மனிதாபிமானப் போராளி தோழர் பத்மநாபாவும் மற்றும் 13 தோழர்களும் தமிழகத்தில் ஒரே இடத்தில் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே, உயிர்த்தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், பொது மக்களையும் நினைவு கூரும் தியாகிகள் தினமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி வழமை போன்று பெருநிகழ்வாக அல்லாது அமைதியான ஆடம்பரமற்றவையாகவும், உணர்வுபூர்வமாகவும் அம்பாறை மாவட்டத்தில் தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக மாவட்ட இணைப்பாளர் சிவசுந்தரம் புண்ணியநாதன் (கரன்) தெரிவித்தார்.
தியாகிகள் தினம் தொடர்பில் மாவட்ட இணைப்பாளர் புண்ணிய நாதன் (கரன்) விடுத்துள்ள அறிக்கையில்,
“தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்காக தீர்க்கதரிசனமான முடிவுகளை எடுத்து தோழர் பத்மநாபா, மக்களின் விடிவுக்காக தமது 39 ஆவது வயதிலேயே எமது ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி எனும் பேரியக்கத்ததைக் கட்டியெழுப்பினார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படியான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் கிடைத்த இணைந்த வடகிழக்கு மாகாண சபையை அவர் தீர்க்கதரிசனமாக ஏற்றுக்கொண்டார்.
ஆனால் நமது மிதவாத தலைவர்களும், ஆயுதக் குழுக்களும் இந்த முடிவுக்கு ஆதரவு வழங்கவில்லை.
அவ்வாறு அன்று அவரது முடிவை ஏற்றிருந்தால் எம்மக்கள் கண்ட முள்ளிவாய்க்கால் பேரழிவையே தடுத்திருப்பதுடன், சமஷ்டியை அடையும் தூரத்திற்கும் வந்திருக்க முடியும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)