
posted 16th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அடாத்தாக பிடித்த காணியில் கனிய மணல் அகழ முயற்சி
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவயன் குடியிருப்புப் பகுதியில் அடாத்தாகப் பிடித்த காணியில் கனிய மணல் அகழ்வு இடம்பெறவிருந்த நிலையில் நேற்று (15) சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் அகழ்வு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவயன் குடியிருப்புப் பகுதியில் சுமார் 160 ஏக்கர் பனை மரங்களைக் கொண்ட இந்தக் காணி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு முள்ளுக்கம்பி வேலி போட்டு காணி அடைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி இந்தியத் தனியார் கம்பெனி ஒன்றுக்குக் கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வு இடம்பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காணிக்குள் சனிக்கிழமை காலை வருகை தந்த சிலர் காணியில் கனிய மணல் அகழ்வில் ஈடுபட நடவடிக்கை எடுத்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
குறித்த காணியில் என்ன திட்டம் முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற விடயம் தமக்குத் தெரியாது என்றும் வெளிப்படையாக எமக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மக்கள் கூறினர்.
மேலும் அப்பகுதிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணி பகுதிக்குச் சென்று அங்கு பொறுப்பாக இருந்தவருடன் கலந்துரையாடியதுடன், மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமையால் இவ்விடத்தில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மக்களுடன் வேறொரு தினத்தில் இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த காணியில் நின்ற குறித்த நபர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)