
posted 7th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களுக்காக கல்வியியலாளர்கள் ஒன்றிணைய வேண்டும்
வடக்கு - கிழக்கு - மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சி கல்வியலாளர்கள் ஒன்றிணைய வேண்டும். வடக்கின் க. பொ. த. உயர்தர பரீட்சை முடிவுகள் மனதுக்கு நிம்மதி தருகிறது என்று கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் செய்தியாளர்கள் அவரை கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கில் கல்வி பெறுபேறு அதிகரித்துள்ளமை பாராட்டத்தக்கது. அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறு வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் மனதுக்கு திருப்தி தருகின்றது. இந்த முயற்சிகளை எடுத்த பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.
வடக்கின் கல்வி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும் இவற்றைப் பொருட்படுத்தாது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கூடிய கவனம் எடுத்து ஆர்வம் காட்டியமை பாராட்டத்தக்கது.
இன்று மலையக மாணவர்கள் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வருகின்றார்கள். இந்த மாணவர்களின் விஞ்ஞான துறை வளர்ச்சிக்கு முறையான திட்டமிடல்களை மேற்கொண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற கல்வித்துறை சார்ந்தவர்கள் உழைக்கவேண்டும்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணம், மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பாக கூட்டுப்பொறுப்பாக கல்வி சார்ந்த அறிஞர்கள் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். வடக்கு, கிழக்கு, மலையகம் ஒன்றிணைந்து மாதிரி பரீட்சை வினாத்தாள்களை புலமை வாய்ந்தவர்கள் தயாரித்து அச்சிட்டு நிறுவனங்கள் அவற்றை இலவசமாக வழங்கி தமிழ் மாணவர்களின் கல்விக்கு அபிவிருத்திக்கு உதவி செய்யவேண்டும்.
சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக விண்ணப்பங்கள் அனுப்புவது தொடர்பில் பல்கலைக்கழக கல்வியாளர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது தயாரிப்பது என்பது தொடர்பில் விளக்கங்களை விளங்கி பயனடைய செய்வதற்கான தெளிவுபடுத்தல்களை முறையாக செய்யவேண்டும்.
வடக்கு - கிழக்கு - மலையக கல்வியாளர்கள் ஒன்றிணைந்து தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு திட்டமிடல்களை செய்ய வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)