
posted 18th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியவர் கிளிநொச்சியில் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் - மடத்தடியை சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைதான நபர், அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது யாழ். பிராந்திய புலனாய்வு பொலிஸாரால் நேற்று (17) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதன்போது, அவரிடமிருந்து 3.8 கிராம் ஐஸ் போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றினர் என்று தெரிவிக்கப்பட்டது.
கைதான நபர், யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தவர் என்றும் இதற்காக நீதிமன்றங்களால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் கூறப்பட்டது.
சந்தேகநபர் கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தப்பிச் சென்றிருந்தார். இதையடுத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர் விசாரணைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)