
posted 15th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கிப் பலி
மருத்துவத் துறைக்குத் தெரிவான அம்பாறை காரைதீவைச் சேர்ந்த 20 வயதான சிவகரன் அக்சயன் என்ற மாணவனே நேற்று வெள்ளிக்கிழமை காலை நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த மாணவன் அக்சயன் அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளையாவார்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்குத் தெரிவான இரண்டு மாணவர்களில் அக்சயனும் ஒருவராவார்.
இவர் அண்மையில் வெளியான க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் வந்து மருத்துவத் துறைக்குத் தெரிவாகியிருந்தார்.
அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கு தரித்துவிட்டு நேற்று வெள்ளிக்கிழமை காலை வரும்பொழுது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடியபோது மூழ்கி உயிரிழந்தார்.
மாணவனின் சடலம் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின்னர் காரைதீவில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இந்த சம்பவம் காரைதீவு பிரதேசத்தை மட்டுமன்றி அம்பாறை மாவட்ட முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)