
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொது வேட்பாளர் வெற்றி பெற அனைவரின் ஆதரவும் அவசியம்
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை தெரிவுசெய்து அவரை அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட செந்தில் தொண்டமான்மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் இன்று எந்தக் கட்சியுமே பலமான நிலையில் இல்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்தி வாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தெரிவு செய்ய முடியும்.
யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51 சதவீதமான வாக்குகள் தேவையாகவுள்ளன. அவ்வாறு வாக்குகளைப்பெறும் நிலை இன்றைய கால கட்டத்தில் சாத்தியமில்லை. எந்தக் கட்சியாலும் 51 வீதமான வாக்குகளை தனித்துப் பெற முடியாது. அது மிகவும் போட்டியாகவே இருக்கும்.
அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் ஒன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் இணைப்புச் செயலாளர் பூ. பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணா கௌரி தினேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)