
posted 8th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டோர் அகப்பட்டனர்
முல்லைத்தீவு கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பயன்படுத்தி, பெருமளவான மீன்களை பிடித்துக்கொண்டு சென்ற படகு ஒன்றை முல்லைத்தீவு மீனவர்கள் பிடித்து கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்துமாறு தொடர்ச்சியாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றபோதும், இது தொடர்பில் கடற்படை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழனன்று (06) கொக்கிளாய் பகுதியில் இருந்து மாத்தளன் பகுதிக்குச் சென்று சட்டவிரோதமாக அதிகளவான மீன்களைப் பிடித்துக் கொண்டு மீண்டும் கொக்கிளாய் திரும்பிய வழியிலே குறித்த படகை முல்லைத்தீவு மீனவர்கள் வழிமறித்து கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்
சுமார் 700 கிலோ வரையான சூடை மீன்கள் படகில் கணப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் இந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் மீன்பிடிக்குப் பயன்படுத்திய ஒளிபாச்சிகள் (லைட்), பற்றிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது கொக்கிளாய் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)