
posted 3rd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கலாநிதி அலன் லைட்மனின் ஊக்கமளிக்கும் விரிவுரை
புகழ்பெற்ற அமெரிக்க பௌதீகவியலாளரும், அதிகளவில் விற்பனையான நூல்களின் எழுத்தாளருமான, எம்ஐடி கலாநிதி அலன் லைட்மனின் இலங்கை வருகைக்கு உதவி செய்வதில் அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது.
மே 31ஆம் தேதி அமெரிக்க மத்திய நிலையத்தில் கலாநிதி லைட்மன் ஒரு ஊக்கமளிக்கும் சொற்பொழிவை ஆற்றினார். இலங்கையின் கல்வி, கலை மற்றும் விஞ்ஞான சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியின பாரியார் பேராசிரியை மைத்ரீ விக்கிரமசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கலாநிதி லைட்மனின் விரிவுரையானது, பிரபஞ்சத்தில் எமது முக்கியத்துவமின்மையையும் அதேபோல், இந்த பிரபஞ்சத்தில் உள்ளவர்கள் மற்றும் அதன் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் எமது தனித்துவமான நிலையின் மகத்தான முக்கியத்துவத்தையும் பிரதிபலித்து ஆன்மீக பொருள்முதல்வாதம், இயற்கை மற்றும் ஏனைய மக்களுடனான தொடர்பின் எமது உணர்வுகள் மீது அவனதானம் செலுத்துவதாக அமைந்திருந்தது. அமெரிக்க மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வானது ஒரு துடிப்பான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவித்ததுடன் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வரும் கலாச்சார உறவுகளை எடுத்துக் காட்டியது.
கலாநிதி லைட்மன் தனது இலங்கை விஜயத்தின் போது, ஜயந்த பிரேமச்சந்திர மன்றம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்து மறைந்த தனது நண்பரான இலங்கைக் கலைஞர் ஜெயந்த பிரேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தினார். பிரேமச்சந்திர தான் இறப்பதற்கு முன்பு பொஸ்டன் நகரில் காட்சிப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருந்த புத்தாக்க மரபை இக்கண்காட்சி கொண்டாடுகிறது. மக்களிடையே தொடர்புகளை உருவாக்குவதில் கலைக்கு இருக்கும் ஆற்றலை கலாநிதி லைட்மனின் வருகை குறிப்பதுடன் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்துவதில் அமெரிக்கா கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கலாநிதி லைட்மனை இலங்கைக்கு வரவேற்ற, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் “ஒரு புகழ்பெற்ற கோட்பாட்டு பௌதீகவியலாளராகவும் மற்றும் ஒரு நாவலாசிரியராகவும், கலை, மானுடவியல் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றிற்கிடையேயான இடைவெளியை கலாநிதி அலன் லைட்மன் குறைக்கிறார். படைப்பு மற்றும் விஞ்ஞான செயன்முறைகள், உள்ளுணர்வு மற்றும் கற்பனையின் பங்கு, ஐன்ஸ்டீனின் பணி, விஞ்ஞானத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான சந்திப்பு, மற்றும் மனித இயல்பின் அதிசயம் மற்றும் பலவீனம், உயிருடன் இருப்பதென்றால் என்ன – என்பன போன்ற விடயங்களில் அவரது விரிவுரைகள் எம் அனைவருக்குள்ளேயும் இருக்கின்ற சிந்தனைகளுடன் ஆழமாக எதிரொலிக்கின்றன. கலாநிதி லைட்மன் போன்ற தொலைநோக்கு பார்வையுடைய அமெரிக்கர்களை பார்வையாளர்களுடன் ஈடுபடுத்துவதற்கும், எமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்குமான இந்நிகழ்வினை எமது அமெரிக்க மையத்தில் நடத்துவதில் நாம் பெருமையடைகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)