
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS), தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.ஜே.டி. அல்விஸ் தலைமையிலான குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.ஜே.டி. அல்விஸ் தலைமையிலான இந்தக் குழுவில், சக உறுப்பினர்களாக இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தரநிலை அதிகாரியான கே.என்.கே. சோமரத்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி டபிள்யூ.எம்.ஏ.என். நிஷேன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த விசாரணைக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி ஆலோசகராக சாரதாஞ்சலி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS), தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் எவை? அதற்கு அமைவாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
வவுணத்தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் கொல்லப்பட்டனர் என்பதை இராணுவ புலனாய்வுச் சபை (DMI), குற்றப் புலனாய்வு பிரிவு (CID) என்பன நான்கு மாதங்களாக நம்பியிருந்தமைக்கான காரணம் என்னவென்றும், மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாராணைகளில் தெரியவந்த தகவல்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை அல்லது அது தொடர்பிலான விசாரணை ஆணைக் குழுக்களினால் 2021 ஜனவரி 31 ஆம் திகதி வழங்கப்பட்ட இறுதி அறிக்கையின் ஊடாக 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்படவிருந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவு (SIS), தேசிய புலனாய்வுப் பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வுப் பிரிவினால் முழுமையான முன்னோடி அறிக்கையொன்று வழங்கப்பட்டிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய காலப் பகுதியில் வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலைச் செய்யப்பட்ட சம்வம் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பணியகம், குற்றப் புலனாய்வு பிரிவு என்பன அறிந்து கொண்ட தகவல்கள் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அதில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு தொடர்பிருப்பதாக நம்பப்பட்டது.
இருப்பினும் மேற்படி சம்பவத்திற்கு ஆறு மாதங்களுக்கு பின்னர் இராணுவ புலனாய்வுப் பணியகம் இதில் தேசிய தவூஹீத் ஜமாத் (NTJ) அமைப்புக்கு தொடர்பிருப்பதாக அறிந்துகொண்டது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கையிடல் மற்றும் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு 2021 ஜனவரி 31 ஆம் திகதி இறுதி அடங்கிய இறுவட்டு ஒன்றை விசாரணை ஆணைக் குழுவிடம் வழங்கியிருப்பதோடு, அது தொடர்பில் எந்தவொரு அதிகாரியிடமும் விசாரணை நடத்தும் அதிகாரத்தை புதிய விசாரணைக் குழுவிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
அதன்படி 2024 செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக புதிய குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)