
posted 16th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் வடக்கு ஆளுநருடன் விசேட சந்திப்பு
யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸூடன் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நேற்று முன்தினம் (14) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தால், இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட் நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் கோவிட்- 19 பெருந்தொற்று காராணமாக இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது முன்வந்துள்ளதுடன், முன்கள ஆய்வுகளையும் நடத்தியுள்ளது. இதற்கமைய, கழிவு முகாமைத்துவம், சுத்தமான குடிநீர், தூய்மை, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கிய வாழ்வை கட்டியெழுப்பக்கூடிய சூழல் கட்டமைப்பு அடங்கலாக ஒன்பது பிரிவுகளின் கீழ் ஸ்மார்ட் நகர திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆளுநரின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த செயல்பாட்டிற்கான முழுமையான திட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்குமாறு இதன்போது ஆளுநர், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அத்துடன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சித் திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)