
posted 29th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வர்த்தகர்களின் தீர்விற்கு - ஆளுநரின் உறுதி
கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்களிடம் அதிகரித்த இடவாடகைக் கட்டணம் அறவிடப்படுவதாக, வர்த்தகர்களாலும், சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தினராலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இராஜபாலன் புவனேஸ்வரன், உபதலைவர் கறுப்பையா ஜெயக்குமார், உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜன் உள்ளிட்டோர் வடக்கு மாகாண ஆளுநரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, புதிய மதிப்பீட்டுத் தொகையின் அடிப்படையிலான கட்டண அறவீட்டினால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைச் சுட்டிக்காட்டி, அதனைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் பாதிக்கப்படாத வகையிலான தீர்வைப் பெற்றுத்தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம். சாள்ஸ் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)