
posted 12th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement
மருதமடு ஆடிமாத பெருவிழா
மன்னார் மறைமாவட்டத்தின் (Mannar Diocese) மருதமடு அன்னையின், The Shrine of Our Lady of Madhu, Mannar எதிர்வரும் ஆடிமாத பெருவிழாவுக்கு மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட நூற்றாண்டு விழாவுக்கான ஆரம்ப நிகழ்வாக ஆயர் அவர்களால் யூபிலி பிரகடனம் செய்யப்படுவதுடன், அன்றைய தினம் ஆரம்ப நிகழ்வும் இடம்பெறும் என மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமடு அன்னையின் ஆடிமாத பெருவிழாவிற்குரிய ஆயத்தங்களைபற்றிய கூட்டமானது இன்று திங்கள் கிழமை (12) மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (Divisional Secretariat of Mannar) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் பல்வேறுபட்ட திணைக்களத் தலைவர்கள், மடுத் திருப்பதி பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட குருவானவர் பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
இக் கூட்டத்தில், மடுத் திருப்பதியின் ஆடி மாத பெருவிழாவிற்கும், பக்தர்களுக்கும் தேவையான நடைமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், கடந்த வருடம் எரிபொருளின் தட்டுப்பாடும், அதன் விலை உயர்வும் பக்தர்களின் வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால், இவ்வருடம், அவ்வெரிபொருளின் பிரச்சனையானது இடையூறாக இருக்காதென்ற காரணத்தினால் இவ்வருட விழாவில் சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கின்றது.
இப்பெருவிழாவானது ஆனி மாதம் 23ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.
இவ் விழாவானது 1924 ஆம் ஆண்டு மருதமடு திருப்பதியிலே பல ஆயர்கள் ஒன்றுகூடி சூழ்ந்திருந்து மருதமடு அன்னைக்கு முடிசூட்டும் விழாவை மேற்கொண்டிருந்தனர். இவ் விழாவின் நூற்றாண்டு நிகழ்வை மன்னார் மறைமாவட்டம் யூபிலி பெருவிழாவாக 2024 ஆம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டு யூலை மாதம் கொண்டாடப்பட இருக்கின்றது.
இதை முன்னிட்டு எதிர்வரும் யூலை மாதம் இரண்டாம் திகதி (02.07.2023) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ் யூபிலியை பிரகடனம் செய்ய இருக்கின்றார்.
இதைத் தொடர்ந்து நாம் மருதமடு அன்னையின் இவ்யூபிலியை வெளிப்படுத்தும் நோக்குடன் வருட முழுவதும் இந்த யூபிலி கொடி இந்த மருதமடு அன்னையின் ஆலய போட்டிக்கோவில் பறக்கவிடப்படும்.
இத்துடன் இந்த யூபிலி தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு யூலை இரண்டாம் திகதி வரை மன்னார் மறைமாவட்டம் முழுவதும் பல நிகழ்வுகள் இடம்பெறும் என அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)