
posted 22nd June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பெற்றோர்களிற்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள மாவட்ட செயலகத்தின் அறிக்கை
தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பெற்றோர்களிற்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தனியார் கல்வி நிறுவங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
- பிள்ளைகளிற்கு ஏற்படும் மன அழுத்தங்களை குறைப்பதற்கும், பெற்றோர் - பிள்ளைகள் இடையிலான பிணைப்பினை ஏற்படுத்தவும் 09 ஆம் வகுப்பு வரை இணைப்பாட விதமான செயற்பாடு தவிர்ந்த பாடத்திட்ட கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் சகல தனியார் கல்வி நிறுவங்களின் zoom தொழிநுட்பம் ஊடாக நிகழ்த்தப்படும் வகுப்புக்களை ஜூலை 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முற்றாகவும், வெள்ளிக் கிழமைகளில் மாலை நேரங்களில் வகுப்புகளை நடத்துவது தவிர்த்தல்.
- தனியார் கல்வி நிறுவனகள் சுகாதார வசதிகளைக் கொண்டதாகவும், கற்றல் செயற்பாட்டிற்கு ஏற்றதாகவும் இருத்தல் வேண்டும். அதனை சுகாதாரத் திணைக்களம், உள்ளுராட்சி சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் உறுதிப்படுத்தல்.
- கல்வி செயற்பாட்டில் ஈடுபடும் அனைத்து தனியார் கல்வி நிறுவங்கள், பிரத்தியேக குழு வகுப்புகளை நடத்துபவர்கள், தமது நிறுவனம் சார்ந்த பதிவினை உள்ளுராட்சி சபைகளில் மேற்கொண்டு பிரதேச செயலகங்களிற்கு விபரங்களை சமர்ப்பித்தல் வேண்டும். கல்வி செயற்பாட்டிற்கு மேலதிகமாக 15 - 30 நிமிடங்கள் நேரத்தை ஒதுக்கி ஆன்மிகம் மற்றும் சமூக விடயங்கள் குறித்து மாணவர்களிற்கு விழிப்புணர்வூட்டல்.
- தற்பொழுது கல்வி செயற்பாட்டில் ஈடுபடும் அனைத்து தனியார் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து மாவட்ட மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பினை உருவாக்கி அவற்றின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதுடன், எதிர்காலத்தில் தமது கருத்துக்களையும் கண்காணிப்புகளையும் இவ் அமைப்பின் பிரதிநிதிகளுடாக மேற்கொள்ளல்.
- மேற்குறித்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்துவததை உறுதிப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மற்றும் எதிர்காலத்தில் இந்த செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் சுகாதாரத்துறை, காவல்துறை, கல்விசார் துறையினர், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன பிரதிநிதிகள் போன்றோரை உள்ளடக்கி குழுக்களை அமைத்தல்.
- இந்த குழுக்கள் ஊடாக மாதாந்தம் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்து பெற்றோர்களிற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுடன், மேற்குறித்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுவதை கண்காணிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்குதல்
எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)