
posted 22nd June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பெரும் தொகையான பாடசாலைகள் வடக்கில் மூடப்பட்டுள்ளன - ஆளுநர்
வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டுள்ளன. இதற்கு காரணம் கிராமப் புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நேற்று (21) கொண்டாப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகா வித்தியாலத்துக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். வடக்கை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டுள்ளன. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே.
இதே நிலை மட்டக்களப்பில் 7 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும்போதும் ஏற்பட்டது. இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் முதலாம் வகுப்பிலே மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றன என்றும் பிரதேச செயலாளர்கள் அப்போது தெரிவித்தனர்.
எனவே, இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் வாழ வைக்க வேண்டுமென எண்ணுகின்ற எங்கள் சமூகம், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். இந்த சமூகத்தை வாழவைக்கின்ற வழிவகைகளை செய்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
இதேவேளை, எமது சமூகத்தில் விவாகரத்து அதிகரித்தமை, குழந்தை பேறு குறைவடைந்தமை, வயது சென்ற திருமணங்கள் அதிகரித்து காணப்படுதல் மற்றும் குடிபோதை, போதைப்பொருள் பாவனை, தற்கொலை போன்ற பல்வேறு சமூகப் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.
எனவே, இவற்றை எல்லாம் கடந்து இந்த சமூகம் வாழ வேண்டும் என்றால், புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது. இதேபோன்ற சிறிய பணிகளோடு மட்டும் நின்று விடாது இந்த சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளுக்கும் தீர்வு தேட வேண்டிய காலம் தற்போது நிலவுகிறது.
வெறுமனே உரிமை பிரச்சினையோ, அரசியல் பிரச்னையோ அல்லாமல் எங்கள் பிரச்சினைகள் எது என உணர்ந்திருப்பீர்கள். இளைய சமூகத்திடமும், மாணவர்களிடையேயும், சிறுவர்களிடையேயும், குடும்பங்களிடையேயும் புரையோடிப் போயிருக்கின்ற சமூக உளநல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் இன்று எங்களிடம் உள்ளது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)