
posted 4th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
பிஸ்டலை லோட் பண்ணி அச்சுறுத்தப்பட்ட கஜேந்திரகுமார்
பொலிஸ்காரர் ஒருவர் கடுமையான தூஷண வார்ததைகளை பயன்படுத்தி என்னை ஏசினார். அத்துடன், இடுப்பில் இருந்த பிஸ்டலை எடுத்து 'லோட்' பண்ணி எனக்கு குறி வைத்தார் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி.
முன்னதாக பொலிஸ் புலனாய்வாளர் ஒருவர் தன்னையும், தனது சாரதியையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு வெள்ளிக்கிழமை (02) சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி. அங்குள்ள விளையாட்டுக் கழகம் ஒன்றில் இளைஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம், சந்தேகத்துக்கு இடமான முறையில் இருவர் நின்றனர். அவர்களை அங்கிருந்தவர்கள் விசாரிக்க முனைந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிய வருகின்றது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கஜேந்திரகுமார் எம். பி. வெள்ளி மாலை வடமராட்சி ஊடக இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தவை வருமாறு,
“இன்று (02) பிற்பகல் 3 மணியளவில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விளையாட்டுக் கழகத்தினரின் அழைப்பின் பேரில் மைதானத்தில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்தித்துக் கொண்டிருந்த வேளை என்னோடு கட்சியின் உறுப்பினர்களும் உடன் இருந்தார்கள்.
சந்திப்பு நடந்துகொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் குறித்த இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து எங்களை அவதானித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எமது அமைப்பின் கொள்கைக்கு அமைவாக எம். பிக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை பெறாமல் இருப்பதனால் எங்களின் அணியை சேர்ந்த பகுப்பாய்வு உத்தியோகத்தர் குறித்த இரு இளைஞர்களிடமும் சென்று என்ன விடயத்துக்கு வந்துள்ளீர்கள்? நீங்கள் யார்? என வினவியபோது அவர்கள் ஒரு தெளிவான பதிலை கொடுக்க மறுத்தார்கள்.
அப்போது, இங்கு வந்திருப்பவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவருக்கு பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்றது. நீங்கள் யாரென்பதை வெளிப்படுத்தாமல் இங்கே இருக்க முடியாது என்று கூறியபோது தாங்கள் புலனாய்வு பிரிவினர் என்று அறிமுகப்படுத்தினர். அப்போது, நான் அந்த இடத்துக்கு சென்று உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டவேளையில் அதனை தர மறுத்தார்கள். அப்போது எனது அடையாளத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்தி எனக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலையும் குறிப்பிட்டு நீங்கள் அடையாள அட்டையை காட்டாவிட்டால் உங்களை செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று சொன்ன இடத்தில், அதில் ஒருவர் என்னை தாக்கி, எனது பகுப்பாய்வு உத்தியோத்தருக்கும் தலைக் கவசத்தால் அடித்து விட்டு ஓடினார்.
அப்போது எனது சாரதியும், பகுப்பாய்வு உத்தியோத்தரும் அவருக்கு பின்னால் ஓடினாலும்கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. மற்றவரை அங்கு நின்ற இளைஞர்களும், என்னுடைய அணியை சார்ந்தவர்களும் சுற்றி வளைத்து அவரிடம் அடையாள அட்டையை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அயலில் உள்ள பாடசாலையில் இருந்த பொலிஸ் விளையாட்டு சீருடையை அணிந்த ஒருவரும், அவரோடு பொலிஸ் சீருடையில் ஆயுதத்தை தாங்கியிருந்த இன்னுமொருவரும், வேலிக்கு கிட்ட வந்து அவர்கள் எங்களுடையவர்கள். நீங்கள் அவரை தடுத்து வைக்க முடியாது என கடுமையான வார்த்தைகளில் கூறி அவரை உடனடியாக விடுங்கள் என்று கூறினர்.
அப்போது, நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர்கள் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நடந்து கொண்டுள்ளார்கள். அவர்களின் இடுப்பில் பிஸ்டல் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அப்படியான நிலையில் அவர்கள் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம். அந்த வகையில் வந்து அவர்களை அனுப்பி வைக்க உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று சொன்னேன். அச்சமயம், பொலிஸார் கடுமையான தூஷண வார்ததைகளை பயன்படுத்தி என்னை ஏசியது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் அவர் தனது இடுப்பில் இருந்த பிஸ்டலையும் 'லோட்' பண்ணி எனக்கு குறி வைத்தார்.
அந்த நேரம் ஒரு பொலிஸ் ஜீப் மைதானத்துக்குள் வந்தது. அதிலிருந்து இறங்கி வந்த வயதான பொலிஸ் அதிகாரி தன்னை மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்று அறிமுகப்படுத்தி எங்களால் சுற்றி வளைக்கப்பட்டு வைத்திருந்த நபர் தங்களுக்கு உரியவர். அவரை விடுங்கள் எனக் கூறிய போது, நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்னை அடையாளப்படுத்தி எனது அடையாள அட்டையையும் காட்டி, நடந்த சம்பவத்தை மிகத் தெளிவாக அவருக்கு எடுத்துக் கூறி, இங்கே எனது உரிமைகள் முற்று முழுதாக மீறப்பட்டதையும் தெரிவித்தேன். அதனை கேட்ட குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த இருவரையும் தண்டனை இடமாற்றத்தில் அனுப்புவதாகக் கூறினார்.
அதனை நான் ஏற்க மறுத்தபோது மருதங்கேணி பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தார். அப்போது நான் எனக்கு மருதங்கேணி பொலிஸாரால்தான் அச்சுறுத்தல் உள்ளது. எவ்வகையில் வர முடியும் எனக் கேள்வி எழுப்பினேன். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என சொன்னேன். இது தொடர்பில் யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணையாளர் கனகராஜ் அவர்களிடமும் முறையிட்டுள்ளேன் என்றார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜின் அறிக்கை
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி. தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது. எழுத்துமூல முறைப்பாடு கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வியடம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் கூறுகையில்,
“பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மக்கள் சந்திப்புக்கு சென்றவேளை புலனாய்வாளர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானார் என்றும் அவ்விடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார் எனவும் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியது. இந்த விடயம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பியிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றை நாளைய தினம் (இன்று) வழங்குமாறும் அவ்வாறு வழங்கிய பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)