
posted 12th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement
நவீன டிஜிற்றல் ஊடகவியல்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நவீன டிஜிற்றல் ஊடகவியல் எனும் தலைப்பிலான செயலமர்வானது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான வசந்த சந்திரபால தலைமையில், அம்பாறை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் முழு நாள் அமர்வாக இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எம்.ஏ. கமல் நெத்மினி, நவயுகத்தோடு இணைந்த புதிய ஊடக செயற்பாடுகளைக் கட்டியெழுப்பப்படுவதோடு, ஊடகத்துறை மூலம் புதிய யுத்தை உருவாக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இச்செயலமவர்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 40 பேர் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
தலா 20 பேர் வீதம், இரு தினங்கள் வெற்றிகரமாகவும், மிகப் பயனுள்ளதாகவும் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச் செயலமர்வில், டிஜிற்றல் ஊடகத்துறை விற்பன்னர்களான ஜயசிறி ஜயசேகர, மெட்லால் வீர சூரிய ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“நாட்டில் சக்தி மிக்க, பலம் பொருந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்குப் பலம் சேர்க்கும் பிராந்திய ஊடகவியலாளர்கள் மிகவும் முக்கியத்துவமிக்கவர்களாவர்.
மக்கள் பிரதிநிதிகளையும், நல்லாட்சியையும் உருவாக்கும் சக்தி மிக்க ஊடகவியலாளர்கள் நவீன யுக வளர்ச்சிக்கு ஏற்ப பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இத்தகைய செயலமர்வை ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தையும், குறிப்பாக இதன் முக்கியவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் வசந்த சந்திர பாலவையும் விதந்து பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
சங்கத்தலைவர் வசந்த சந்திரபால உரையாற்றுகையில்,
பிராந்திய ஊடகவியலாளர்களின் கடின உழைப்பால் ஊடகங்கள் முதன்மை பெறுகின்ற போதிலும், உரிய பயன்கிடைப்பதாக இல்லை. பிற்காலத்தில் ஓய்வூதியமோ, சகாய நிதிகளோ ஏன் காப்புறுதி கூட இல்லாத பரிதாப நிலமையே எமது அர்ப்பணிப்புக்குக் கிடைக்கும் பேறாகவுள்ளது. ஊடக நிறுவனங்கள் இத்தகைய எமது அர்ப்பணிப்பை, உழைப்பை சுரண்டும் நிலையிலேயே உள்ளமை கவலை தரும் விடயமாகும்” எனக் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)