
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சவால்களை தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவளிக்கும் - இந்திய துணைத் தூதுவர் உறுதி
மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் இந்திய அரசாங்கம் வழங்கும் என்று தம்மை சந்தித்த கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி..
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை தடை செய்யுமாறு வலியுறுத்தி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் நேற்று (19) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் நிறைவில் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதுவரை சந்தித்து மனுவை கையளித்தனர். இதன்போதே துணைத் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து துணைத் தூதரகம் விடுத்த செய்திக் குறிப்பில்,
மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின்போது இந்திய அரசு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். வட மாகாணத்தில் மீனவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் கவலைகளை எழுப்பினர். மற்றும் தங்களின் கஷ்டங்களை போக்குமாறு துணைத் தூதுவரிடம் வடக்கு மீனவர் பிரதிநிதிகள் முறையிட்டனர்.
இவர்களுக்கு பதிலளித்த துணைத் தூதுவர், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவதாகவும் உறுதியளித்தார். இப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பகிரப்பட்ட கவலைகளை நிவர்த்தி செய்யவும் இரு தரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் என்றுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)