
posted 5th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
ஊழல் மோசடிகளுக்குட்பட்டோர் விசாரணைக்குட்படுத்த வேண்டும்
இலங்கைத் தீவில் ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால், பல்வேறுபட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ஷ குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலுள்ள அவரின் கட்சி பணிமனையில் சனிக்கிழமை (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மருதங்கேணி பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டமை இந்த நாட்டின் இனஅழிப்பு நடவடிக்கையின் புதிய வடிவத்தையே காட்டி நிற்கின்றது
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை கொன்றொழித்து படுகொலைகளை செய்ய ஜேர். ஆர். ஜெயவர்த்தனவின் மருமகனான ரணில் அரசின் இந்த செயல்பாடானது இந்த நாட்டிலே அதியுச்ச அடக்கு முறையையே காட்டி நிற்கிறது. இந்த நாட்டிலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமானவரி திணைக்களத்திலே பதிவு செய்து தங்களுடைய உழைப்பு வருமானங்களுக்கு வருடாந்தம் வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.
ஒரு நாட்டிலே வரி அறவிடுவது என்பது மிக நல்ல விடயம். ஆனால், இலங்கையில் நான்கு வயது தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை சுயமாக பாடசாலைக்கு சென்று கல்வி கற்க முடியாத, அதாவது, பருவ காலச் சீட்டை பெற்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணம் செய்து தமது கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. ஒரு மாணவனின் கல்வி நடவடிக்கைகளில் ஒரு வசதியை செய்து கொடுக்காத இந்த அரசாங்கம் 18 வயதுக்கு பின்னர் அவர்களிடமிருந்து வரியை அறவிடுவது என்பது இந்த நாட்டின் ஒரு மிக மோசமான நிலைமையை காட்டி நிற்கின்றது.
இந்த அரசாங்கத்தில் பலர் பல்வேறு பட்ட மோசடிகளை செய்து போயிருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்தின் மத்திய வங்கியின் பல மில்லியன் ரூபாய்களை ரணில் அரசு இருக்கின்ற போது கொள்ளையடித்து சென்றவர்களை மத்திய வங்கி ஆளுநரைக் கூட இதுவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.
சீனியிலும், தேங்காய் எண்ணெயிலும் ஊழல் மோசடி செய்த கோட்டாபயவின் குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்ய திராணியற்ற ரணில் அரசாங்கம், இங்கே பல ஊழல்களில் ஈடுபட்டு விடுதலைப் புலிகளிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளிலே வைப்பிலிட்டு வைத்திருப்பவர்களுக்கு இதுவரையும் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை என்றார்.
இருபது தலைமுறைகளுக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துவிட்டு இருக்கின்ற மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தை விசாரிக்கவும் இந்த அரசாங்கம் இன்று தயாராக இல்லை. ஆனால், இந்த இளைஞர்களில் மட்டும் அதிகரிசனை கொண்டிருக்கின்றது என்றார்.
கொள்ளையடித்தவர்கள் களவெடுத்தவர்களின் பக்கத்தில்தான் இந்த நாடு எப்போதும் நிற்கின்றது. இந்தத் தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ஷ குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)