
posted 26th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மௌன யுத்தம்
தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் என்று திட்டமிட்டு 1949ஆம் ஆண்டு, முதல் பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா கிழக்கில் கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு - கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் ஆகும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம்.
மட்டக்களப்பில் இடம் பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33ஆவது தியாகிகள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். ஆயுத போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து தமிழினம் இரண்டாம் தர பிரஜைகளாகவே இந்த நாட்டிலே அழைக்கப்பட்டோம் .
2009 மே 18 உடன் ஆயுதப் போராட்டம் முற்றுமுழுதாக மௌனிக்கப்பட்டது. இந்த போரட்டம் மௌனிக்கப்படும் முன்னர் பல தலைவர்களை இழந்திருக்கின்றோம். அதில் போராட்டத் தலைவர்கள் மாத்திரமல்லர், மிதவாத கட்சியான தழிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசு கட்சியின் தலைவர்கள் அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்களை இழந்திருக்கின்றோம்.
ஜே. ஆர். ஜெயவர்த்தன சமாதான பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கினார். 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வட - கிழக்கில் வித்தியசமான ஒரு திணிப்பை செய்து வருகின்றது.
அதுதான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்க வேண்டும், தமிழரின் குடிபரம்பலை மாற்றி அமைக்க வேண்டும், வெலிஓயா குடியேற்றம் மூலம் இணைந்திருந்த வடக்கு, கிழக்கை நிலத் தொடர்பற்ற மாகாணங்களாக பிரிப்பது போன்ற நடவடிக்கையை திட்டமிட்டு செய்துவருகின்றது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)