
posted 1st June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
ஜனாதிபதியை சந்திக்க அழைப்பு இல்லை ஆதங்கப்படும் அன்ராசா
ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று தடவை மகஜர் அனுப்பியும் எந்தவித அழைப்பும் இதுவரை இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதி அன்னலிங்கம் அன்ராசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (01) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று தடவைகள் தம்மால் மூன்று மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் முதலாவது மகஜர் யாழ்ப்பாண மஹ விகாராதிபதி ஊடாக அனுப்பியிருந்தோம்.
அதனை தொடர்ந்து, வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஊடாக மகஜரை அனுப்பியிருந்தோம். அதற்கும் ஜனாதிபதியிடமிருந்து எந்த விதமான அழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.
நாங்கள் வட மாகாண கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்கள் ஒன்றிணைந்து எங்களுடைய வடமாகாண மீனவர்களுடைய பிரச்சனைகளை முன் வைத்து வருகிறோம். பிரச்சனைகளை தெளிவுபடுத்தி வருவதோடு எங்களுடைய கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறோம்.
இந்த வகையிலே பருத்தித் துறை பிரதேசத்திலேயே வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக எங்களுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு மூன்றாவது மகஜராக நாங்கள் பருத்தித் துறையை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு 2023 ஆம் ஆண்டு நாலாம் மாதம் பருத்தித்துறை பிரதேச செயலர் ஊடாகவும் மகஜர் அனுப்பியிருந்தோம். அதற்கும் இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
வடக்கு கடற்றொழில் சமூகம் மிகப் பெரும் ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால் இதுவரை எவற்றிற்கும் ஜனாதிபதி பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னும் பல பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் நா. வர்ணகுலசிங்கம், பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதி ஏ. கைற்றல் ஆகியோரும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)