
posted 7th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கல்முனை மாநகர ஆணையாளர் எச்சரிக்கை
டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் டெங்கு ஒழிப்பு வார மூன்றாம் நாள் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (07) மாநகர சபைக்குட்பட்ட சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டது.
இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஆணையாளர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் தீவிரமடைந்து வருவதை எல்லோரும் அறிவோம். எமது கல்முனைப் பிராந்தியத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக கல்முனை மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் செய்யப்பட்டு, வலய ரீதியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதேசத்தில் மாநகர சபையின் 04 வலயங்களுக்குமான அனைத்து திண்மக் கழிவகற்றல் வாகனங்களும் ஆளணியினரும் ஒரு வலயத்தில் முழுமையாக களமிறக்கப்பட்டு, அவ்வலயத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஊடாக கல்முனை மாநகரை டெங்கு அற்ற பிரதேசமாக பாதுகாப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும்.
தற்போது இடம்பெறுகின்ற சுத்திகரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் பொதுமக்கள் தமது வீடு, வளவுகளை டெங்கு பரவலுக்கு இடமளிக்காமல் தொடர்ந்தும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அத்துடன் பொது இடங்களில் குப்பை வீசுவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இவற்றை மீறி, யாராவது டெங்கு பரவலுக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எமது கிழக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியிருக்கிறார்.
அதன்படி பொதுச் சுகாதார பரிசோதகர்களினதும் பொலிஸ் மற்றும் முப்படையினரதும் ஒத்துழைப்புடன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத் தருகின்றேன்-என்றார்.
இவ்வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று இஸ்லாமாபாத், கல்முனை தமிழ் பகுதி, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு மற்றும் மணற்சேனை பிரதேசங்களில் திண்மக்கழிவுகளும் டெங்கு நுளம்பு பரவலுக்கு ஏதுவான கொள்கலன்களும் சேகரித்து அகற்றபட்ட்டுள்ளன.
மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவு மேற்பார்வையாளர் எம்.அத்ஹம் மற்றும் வலய மேற்பார்வையாளர்களும் இப்பணிகளை நெறிப்படுத்தியிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)