
posted 27th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள்
இலங்கையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 29 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடுவதெனப் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் துல் ஹஜ்ஜு மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதால், கொழும்பு, பெரியபள்ளிவாசலில் கூடிய தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாட்டில், மேற்படி பெருநாளை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் தயாராகி வருவதுடன், கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்கள் உட்பட திறந்த வெளிகள், பொது மைதானங்களில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதேவேளை ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான உணவுப் பொருட்கள் மற்றும் உடுதுணிகளைக் கொள்வனவு செய்வதில் முஸ்லிம் மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருவதால், முக்கிய வர்த்தக நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக கிழக்கில் சாய்ந்தமருது கல்முனை, மருதமுனை, காத்தான்குடி, மட்டக்களப்பு, அக்கறைப்பற்று, சம்மாந்துறை முதலான பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.
புடவைக்கடைகள் தினமும் நள்ளிரவு வரை திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை பிரதான வீதிகள் மற்றும் கிராமங்களில் அங்காடி புடவை வியாபாரத்திலும் பெருமளவான வெளிமாவட்ட வியாபாரிகள் ஈடுபட்டுமுள்ளனர்.
சில பிரதேசங்களில் பெருநாளையொட்டிய சிறப்புச் சந்தைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)