வங்கியிலுள்ள எமது பணத்தை அரசு எடுத்துவிடுமா? மறுக்கிறார் சிவானந்தன்

வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை அரசாங்கம் எடுத்து விடும் என்பதில் உண்மையில்லை என இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ. சிவானந்தன் தெரிவித்தார்.

வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மை தன்மை இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வங்கியின் யாழ்ப்பாணபஸ் நிலைய கிளை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த காலங்களில் கொரோனா என்ற பெரும் சவாலை எதிர்கொண்டு இருந்தோம். அதேபோல நாடு தற்போது பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டாலும் அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு மக்களின் நம்பிக்கை, எங்கள் பங்களிப்பு எல்லாவற்றையும் சேர்ந்து இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அதற்கு வங்கிக் கட்டமைப்பு என்பது பொருளாதா கட்டமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும். வங்கி கட்டமைப்பு என்பது இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை சமன் செய்ய முடியாது.

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு வீழ்ச்சி அடையுமாக இருந்தால் நாடு அதால பாதாள நிலைக்கு சென்றுவிடும். தற்போது மக்கள் பலருடைய எண்ணங்கள் வங்கிகளில் உள்ள காசுகளை அரசாங்கம் எடுத்துவிடக்கூடும் என்று பலவிதமாக யோசிக்கிறார்கள்.

உண்மையாகவே அது பொய்யானவிடயமாகும். வங்கி கட்டமைப்பு இந்த நாட்டில் இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரமானது அதலபாதாளத்துக்கு சென்றுவிடும். எனவே வங்கி கட்டமைப்பை சீராக பாதுகாக்கவேண்டியதும் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருக்கவேண்டியதும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள்தான்.

ஆகவே வங்கிக் கட்டமைப்பு பற்றி நீங்கள் தவறான வதந்திகளை புரிதலை ஏற்படுத்தவேண்டாம், என்றார்.

வங்கியிலுள்ள எமது பணத்தை அரசு எடுத்துவிடுமா? மறுக்கிறார் சிவானந்தன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)