
posted 20th June 2022
அன்பு, கருணை, இரக்கம் என்ற கருப்பொருட்களை உள்ளடக்கிய புத்த பெருமானின் போதனைகளை பின்பற்றுவதாக கூறிய சிங்கள ஆட்சியாளர்கள் 1948 இல் இருந்து இன்று வரை புத்த பெருமானின் சிலைகளை ஆக்கிரமிப்பின் சின்னமாக தமிழர் தாயகப்பகுதியில் பயன்படுத்துகின்றனர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
சபா குகதாஸ் தனது ஊடகச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
உலகில் உள்ள உயர்ந்த தத்துவங்களுள் கௌதம புத்தரின் போதனைகள் மிகவும் போற்றுதற்குரியவை.
நிலையற்ற உலக வாழ்வில் ஆசை கொள்வதை விட துறவியாக செல்வதே மேலானது என்ற முடிவில் அரச அரண்மனை வாழ்விற்கு முடிவு கட்டிய ஒரு இந்து வம்சத்தை சேர்ந்த சித்தார்த்தன் என்ற நாமத்தை கொண்ட கௌதம புத்தரின் உண்மையான வரலாற்றை தெரிந்தும், இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள் அற்புதமான ஞானியின் உருவச் சிலையை ஆக்கிரமிப்புச் சிலையாக மாற்றியது வேதனையான செயற்பாடு என்பதற்கு அப்பால் மதம் என்ற போர்வையில் மதங்கொண்டுள்ளனர்.
இலங்கைத்தீவில் ஆரம்ப காலங்களில் குறிப்பாக அனுராதபுர பொலநறுவைக்கால இந்து ஆலயங்களுள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டு விகாரைகளும், புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அதனை விட தமிழர் தாயகப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வடக்கிலும் பெருமளவில் காடுகள் வீதிகள் என எங்கு பார்த்தாலும் புத்தர் சிலைகளாக முளைக்கின்றன.
அத்துடன் தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு இடங்கள் புத்தரின் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களாக நீதிமன்ற தடைகளை மீறி கையகப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக குருந்தூர் ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெறும் ஆக்கிரமிப்பு.
பௌத்தத்தின் பெயரால் தமிழர்களின் பண்பாடு இனப்பரம்பல் போன்றவற்றை அழிக்கின்ற ஒரு தமிழின அழிப்புக்கு சிங்கள ஆட்சியாளர்களின் ஆயுதம் புத்தர் சிலைகளே. இதனால் புத்தர் சிலைகள் ஆக்கிரமிப்புச் சின்னங்களாக மாறியுள்ளன என குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY