திறந்துவைக்கப்பட்ட புணரமைக்கப்பட்ட வைத்தியசாலை

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ஆலங்குளம் ஆரம்ப வைத்தியசாலை வியாழக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள இவ்வைத்தியசாலை 1994ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை கடந்த சில வருடங்களாக அடிப்படை வசதிகளோ புனரமைப்போ எதுவுமின்றி கைவிடப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தமது மருத்துவ தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்து, வெளியூர் வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டியிருந்தது.

இந்நிலையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எடுத்துக் கொண்ட அயராத முயற்சி காரணமாக சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் இவ்வைத்தியசாலை அனைத்து அடிப்படை வசதிகளுடனும் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம். முபாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இதன் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைத்தியசாலையின் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.ஐ.எம். தொளபீக், திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம். வாஜித், திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர், மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வி.ரி. சர்மா, பொறியியலாளர் எம்.எம்.எம். ஹக்கீம் உள்ளிட்டோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இவ்வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகள், அதற்காக ஏற்படுத்தப்பட வேண்டிய மேலதிக வசதிகள், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

திறந்துவைக்கப்பட்ட புணரமைக்கப்பட்ட வைத்தியசாலை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)