சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017- 18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

கடந்த 2017- 18 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சிநெறி ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சில வருடங்கள் காலதாமதமானதுடன், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த வருடம் இதற்கான இறுதிப் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இதில் 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், அந்த மாணவர்களுக்கான இதழியல் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைக்கும் நிகழ்வே நாளை இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவரும், இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வின் நெறிப்படுத்தலில் இந் நிகழ்வு நடைபெறும்.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் கலாநிதி ஏ. சண்முகதாஸ் அதிதி உரையும் நிகழ்த்துவார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் தலைமைப் பேராசிரியரும், வெளிவாரி கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் எம்.எச். தௌபீக் உள்ளிட்ட இப்பயிற்சி நெறியின் அனைத்து வளவாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கருத்துத் தெரிவிக்கையில்.
எமது பல்கலைக்கழகத்தில் கற்று சிறந்த ஊடகக் கலாச்சாரம் ஒன்றினை உருவாக்க முன்வந்துள்ள இம் மாணவர்களின் திறமையைப் பெரிதும் பாராட்டுவதுடன், ஒரு ஒழுக்கமான ஊடக கலாச்சாரம் ஒன்றினை இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் தோற்றுவிப்பதற்கு இவ்வாறான பயிற்சி நெறிகள் மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, இவ்வாறான பயிற்சி நெறிகளை இனி வரும் காலங்களில் எமது பல்கலைக் கழகத்தில் தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும், பயிற்சி நெறியின் பின்னர், நாட்டிலும் சர்வதேசத்திலும் ஊடக தர்மத்தினைப் பேணக்கூடிய நல்ல ஊடகவியலாளர்கள் உருவாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவுமே இந்த பயிற்சி நெறியை தெடரவுள்ளோம். எனத்தெரிவித்தார்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)