கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - எச்சரிக்கிறார் அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்து காணப்படுகின்றது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில் வழங்கவேண்டும்.

அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளது. அந்த நிர்ணய விலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களை விற்கவேண்டும்.

சில்லறை விற்பனையாளர்ளும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்கவேண்டும். அரிசியை அதிக விலைக்கு விற்று எங்கள் பாவனையாளர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கவேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது நியாயமான விலையாக காணப்படுகின்றது. அதே நேரத்தில் எதிர்காலங்களில் யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரின் கண்காணிப்பின் மூலம் கட்டுப்பாடு விலையை மீறி அரிசி விற் போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம், என்றார்.

கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - எச்சரிக்கிறார் அரச அதிபர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)