
posted 9th June 2022
இலங்கையின் வட பகுதியில் தற்சமயம் பலாப்பழ சீஸன் ஆரம்பமாகியுள்ளதால், கிழக்கிலங்கையில் பலாப்பழ விற்பனை களை கட்டத் தொடங்கியுள்ளது.
வட பகுதி பலாப்பழங்கள் தனிச்சுவை கொண்டவையாகவுள்ளதால், யாழ் பலாப்பழங்களுக்கு நாட்டின் எப்பகுதியிலும் பெரும் மவுசுடன் மக்கள் விரும்பி வாங்கி உண்டு சுவைப்பது வழக்கமாகும்.
இந்த வகையில் வடக்கின் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம் போன்ற பிரதேசங்களிலிருந்து பலாப்பழங்களை கொள்வனவு செய்து வந்து கிழக்கில் விற்பனை செய்வதில் தற்சமயம் பலர் ஈடுபட்டு வருவதுடன்,
இவர்கள் தினமும் நல்ல வருமானத்தையும் பெற்றுவருகின்றனர்.
குறிப்பாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதான வீதிகளில் (முக்கிய பிரதேசங்களில்) இவ்வாறு பலாப்பழ வியாபாரம் களை கட்டத்தொடங்கியுள்ளது.
தமது சொந்த வாகனங்களில் வடக்கு சென்று பலாப் பழகங்களைக் கொண்டுவரும் வியாபாரிகள் பழங்களை துண்டுகளாக வெட்டி விற்பனை செய்வதிலேயே ஆர்வம் காட்டுவதாகவும், இதனால் குறித்த வியாபாரிகள் கூடுதல் இலாபமீட்டுவததாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்ற நிலையில், தற்போதய எரிபொருள் நெருக்கடி, விலையேற்றத்திற்கு மத்தியில் வடக்கிற்கு சென்று வருவதில் தாம் பெரும் சிரமங்களை அனுபவிப்பதுடன் குறைந்த இலாபமே கிடைப்பதாகவும் பலாப்பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியிருப்பினும் தனிச்சுவைகொண்ட வடக்கின் பலாப்பழங்களை ஆர்வத்துடன் வாங்கி உண்டு சுவைப்பதில் கிழக்கு மக்கள் தயக்கம் காட்டுவதே இல்லை! என்பதே நிலமையாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)