நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2022ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெறக்கூடியவாறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் முன்னாயத்த கூட்டம் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதனடிப்படையில் திருவிழாவுக்கு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள், படகு, தரை போக்குவரத்து, சுகாதார நடைமுறைகள், உணவு, குடிதண்ணீர், மற்றும் மின்சார விநியோகம் மற்றும் வீதி திருத்தம் போன்ற மிக அத்தியாவசியமான தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டது என யாழ். அரச அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

வேலைகளுக்கு பொறுப்பான திணைக்களம் மற்றும் பிரதேச சபையினர் அதற்குரிய பொறுப்புகளை ஏற்று முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

கடல் போக்குவரத்து காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 12ஆம் திருவிழாக்கு பின்னர் இரவு 9 மணி வரை கடல் போக்குவரத்தை விரிவுபடுத்தி தருமாறு கோரியிருகின்றோம். அதேபோல தரை போக்குவரத்தும் அவ்வாறு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதாக தீர்மானித்துள்ளோம்.
குறிப்பாக பொலீத்தின் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளோம்.

நயினாதீவு ஆலயப் பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மது அருந்துதல், மாமிசங்களை விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆகவே பக்தர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதேபோல படகுப் போக்குவரத்தில் ஈடுபடும் அத்தனை படகுகளும் தங்களுக்குரிய தகுதிச் சான்றிதழைப் பெற்ற பின்னரே சேவையில் ஈடுபட முடியும்.

அத்தோடு படகில் பயணிப்பவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அங்கிகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே இவ்வருட நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம் பெறுவதற்குரிய முன்னேற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடுபாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து ஏற்பாடுகளை முன்னெடுப்பர்.

அத்தோடு மிக முக்கியமாக ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் தங்கள் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக பேண வேண்டும். ஏனெனில் தற்போதைய நெருக்கடி நிலையில் திருட்டுச் சம்பவங்கள் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.

அத்தோடு கடல் பயணம் மற்றும் தரைப் பயணங்களின்போது சிறுவர்கள் மற்றும் வயது குறைந்தவர்கள், முதியவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்றார்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)