
posted 20th June 2022
அட்டாளைச்சேனையில் இருந்து கல்முனை அஷ்றப் ஞாபகார்த்த வைத்திசாலை நோக்கி பயணித்த கற்பிணித்தாய் ஒருவரை ஏற்றிவந்த முச்சக்கரவண்டி எரிபொருள் தீர்ந்தமையால் இடைநடுவில் தரித்தபோது பரபரப்புக்குள்ளான குறித்த கர்ப்பிணித்தாயையும் அவருடன் சமூகமளித்த பெண்ணையும் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் ஏற்றிச்சென்று உரிய வைத்தியசாலையில் சேர்ப்பித்த நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிரின் காருண்யமும் மனிதாபிமானமும் மிக்க செயற்பாடொன்று குறித்து பரவலாக தகவல் வெளியாகியுள்ளதுடன் அவருக்கு பாராட்டுக்களும் குவிந்தவண்ணமுள்ளன. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனையில் இருந்து கர்ப்பிணித்தாய் ஒருவர் தமக்கு துணையான பெண் ஒருவருடன் பிரசவத்திற்காக முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கமர்த்தி கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையை நோக்கி அவசர பயணம் மேற்கொண்டார் குறித்த முச்சக்கரவண்டி நிந்தவூர் பகுதியை அடைந்தபோது அதன் எரிபொருள் தீர்ந்துவிட்டமையால் மேலும் முன்னேறிச்செல்லமுடியாது தடைப்பட்டது. இதன்போது குறித்த முச்சக்கரவண்டிச்சாரதி நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல எரிபொருள் நிரப்பு நிலையத்தை நாடினார் அங்கு பெ;றறோல் இல்லை என்பது தெரிவிக்கப்பட்டதும் குறித்த கர்ப்பிணித்தாய் பரபரப்புக்கும் அச்சத்திற்கும் உள்ளானார்.
இந்த வேளையில் குறித்த எரிபொருள் நிலையத்தில் திரண்டிருந்த பொதுமக்களுடன் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்த நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிரின் கவனத்திற்கு குறித்த கர்ப்பிணித்தாயின் பயணத்தடையும் அவரது அந்தரநிலையும் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து உடனடியாக இக்கர்ப்;பிணித்தாயின் பரிதாப நிலையினை மனிதாபிமானத்துடன் நோக்கிய தவிசாளர் தாஹிர் சாரதியுடன் வந்திருந்த தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் முச்சக்கரவண்டியை விட்டும் இறங்கிவருமாறு கூறி தமது வாகனத்தில் ஏற்றியதுடன் அவர்கள் செல்லவேண்டிய கல்முனை அஷ்றப் ஆதார வைத்தியசாலைவரை கொண்டு சென்று விடுவதற்கும் ஆவன செய்தார்.
தாம் இன்றைய நெருக்கடி நிலையிலான முக்கிய உயர்மட்ட கூட்டமொன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்தும் ஒரு கர்ப்;பிணித்தாயின் பிரசவ முக்கியவத்துவத்தை முதன்மைப்படுத்தி குறித்த கர்ப்பிணித்தாயை உரிய வைத்தியசாலையில் தமது வாகனத்திலேயே அழைத்துச் சென்று அனுமதிக்க ஆவனசெய்தமை அவ்விடத்தில் திரண்டிருந்த பெருந்தொகையான மக்களால் பெரிதும் பாராட்டி பேசப்பட்டது. இதேவேளை மக்களுக்கான சேவையாற்றும் உள்ளுராட்சி சபையின் தவிசாளரது இந்த மனிதாபிமான காருண்யமிக்க செயல்குறித்து சமூகவலைத்தளங்களிலும் பரவலாக தகவல்வெளியிடப்பட்டு பராட்டுக்களும் குவிந்தவண்ணமுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முன்மாதிரி செயற்திட்டங்களை அமுல்நடத்தி வெற்றிகண்டுவரும் தவிசாளர் தாஹிர் தலைமையிலான நிந்தவூர் பிரதேச சபை இலங்கையில் முதன் முதலாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவினை இனிப்பெறுவதில்லை என்ற தீர்மானத்தினை அண்மையில் எடுத்திருந்தமையும் இதற்கான பிரேரனையினை தவிசாளர் தாஹிரே முன்மொழிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)