Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இழுவிசைகளுக்குள் அகப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் - சி.அ.யோதிலிங்கம்

தமிழ் அரசியல் இன்று கொழும்பு நலன்சார் அரசியல், புலிசார்பு அரசியல், அபிவிருத்தி அரசியல், செயல்படா அரசியல் என்கின்ற நான்கு இழுவிசைக்குள் மாட்டுப்பட்டுள்ளது. இந்த நான்கு அரசியலும் தவறானவை.

கொழும்பு நலன்சார் அரசியலை சுமந்திரன் குழு மேற்கொள்கின்றது. 2009 க்கு பின்னரே இதுவே தமிழ் அரசியலின் மையமாக விளங்கியது ஆனால் கொழும்பு கொஞ்சம் கூட நெகிழ்ந்து கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதனால் தொடர்ச்சியாக தோல்வியே தழுவியது. எதிர்காலத்திலும் நெகிழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தொடர்ச்சியாக தோல்விகளே கிடைக்கும்.

கொழும்பு நலன்சார் அரசியல் என்பது ஒரு வகையில் இணக்க அரசியலே! இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் வெற்றியை வேண்டி நிற்கின்றது. ஒரு தரப்புக்கு வெற்றியும் மற்றைய தரப்புக்கு தோல்வியும் கிடைக்குமானால் அது இணக்க அரசியலாக இருக்க மாட்டாது. ஆதிக்க அரசியலாகவே இருக்கும். 3 ம்; தரப்பின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கையில் இணக்க அரசியல் சாத்தியம் இல்லை. 13 வது திருத்தம் கூட 3 ஆம் தரப்பின் தலையீட்டின் கீழே இடம்பெற்றது. எனவே தனித்து தென்னிலங்கையுடன் இணக்க அரசியல் நடாத்துவதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. மறுபக்கத்தில் இவ் அரசியல் தமிழ் அரசியல் நீர்த்துப் போவதற்கே வழிவகுக்கும்.

இரண்டாவது புலிசார் அரசியல் அல்லது புலிசார் அரசியல். தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை பின்பற்ற முயற்சிக்கின்றது. அவர்கள் தங்களை புலிகள் இயக்கமாகவே கருதிக் கொள்கின்றனர். ஒரு அரசியல் கட்சி ஒருபோதும் ஒரு விடுதலை இயக்கமாக மாறிவிட முடியாது. புலிகளின் அரசியலில் சாதகமான கூறுகளும் பாதகமான கூறுகளும் இருக்கின்றன. விலை போகாமை, அளவுகடந்த தியாகம் என்பன சாதகமான கூறுகள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் இக்கூறுகள் இருப்பது உண்மையே. கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமையும், நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து தொடர்ச்சியாக அடையாளப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றமையும் சாதகமான அம்சங்கள். இன்று என்ன தான் விமர்சனங்களை முன் வைத்தாலும் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, தையிட்டி விவகாரங்களில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருப்பது முன்னணியினரே!

ஆனால் முன்னணியினரின் போராட்டங்கள் அடையாளப் போராட்டங்களாக இருக்கின்றனவே தவிர பேரெழுச்சிகளாக இல்லை. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் இடதுசாரி குழுக்கள் போராட்டங்களை நடத்துவது போல 10 பேருடன் போராட்டங்களை நடத்தும் நிலையே உள்ளது. பேரெழுச்சிகளை நடத்துவதாயின் தேசமாகத் திரள வேண்டும். மக்களை தேசமாக திரட்டும் பணியை ஒரு அரசியல் கட்சியினால் மட்டும் ஒரு போதும் மேற்கொண்டு விட முடியாது. அதற்குப் பல்வேறு தரப்புகளையும் இணைக்க வேண்டும். எழுக தமிழ், பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போன்ற போராட்டங்கள் பேரெழுச்சிகளாக அமைந்தமைக்கு பல தரப்புகள் இணைந்து தேசமாக திரண்டமையே காரணமாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அரசியலில் மிகப்பெரிய குறைபாடு தேசமாக திரட்டுவதில் அக்கறை செலுத்தாமையே! இதனால் ஏற்பட்ட விளைவு பெருந்தொகையானோர் தேசப் போராட்டத்திற்கு வெளியே தள்ளி விடப்பட்டனர். இதுவே பிற்காலத்தில் போராட்டத்தின் பின்னடைவுக்கும் காரணமாகியது. உண்மையில் தற்போது தேவையானது புலி அரசியல் அல்ல. மாறாக புலிகளிலும் மேம்பட்ட அரசியலே. இந்த உண்மையை முன்னணியினர் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. இதனால் ஒரு வரலாற்றுக் குறைபாடு தொடரும் நிலை ஏற்படுகிறது.
புலி அரசியல் தொடர்பாக கூறப்படும் இன்னோர் குறைபாடு இராஜதந்திர அரசியலின் பற்றாக்குறையாகும். முன்னணி பக்கத்தில் இது நிறையவே உள்ளது. அரசியல் என்பது மூலோபாயத்தை மட்டும் கொண்டதல்ல. தந்திரோபாயங்களையும் உள்ளடக்கியது. தத்ரோபாய அரசியல் என்பது முன்னணியிடம்; மருந்துக்கு கூட கிடையாது. தந்திரோபாயத்தில் முக்கியமானது எதிரியை தனிமைப்படுத்துவது. முன்னணியின் பகிஸ்கரிப்புக் தீர்மானம் தந்திரோபாய அரசியலுக்கு முற்றிலும் மாறானது. இன்று பொது வேட்பாளர் பக்கம் முன்னணியும் நின்றிருந்தால் எதிரிகளை நீண்ட தூரம் தள்ளியிருக்க முடியும். எனவே புலியரசியலும் இன்று பொருத்தமானது அல்ல.

மூன்றாவது அபிவிருத்தி அரசியல் - அதனை அரசாங்க சார்பு கட்சிகளான டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் ஆகியோரின் கட்சிகளும் அங்கயன் ராமநாதன், வியாளேந்திரன் போன்றவர்களும் மேற்கொள்கின்றனர். அரசியல் தீர்வு இல்லாமல் அபிவிருத்தி அரசியலை மேற்கொள்வது எப்போதும் பெருந் தேசியவாத ஆக்கிரமிப்புக்கே வழிவகுக்கும். இங்கே பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதை விட அரசியல் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே பொருத்தமாக இருக்கும். அரசியல் பொருளாதாரம் என்பது அந்த மக்கள் கூட்டத்தின் அரசியலை பாதுகாக்கின்ற பொருளாதாரமே! எனவே, அபிவிருத்தி அரசியல் தமிழ் மக்களுக்கு பெரிதும் உதவப்போவதில்லை.
மறுபக்கத்தில் இவ் அபிவிருத்தி அரசியல் பெருந்தேசிய வாத ஆக்கிரமிப்புக்கு வழிவகுப்பதோடு தமிழர் தாயகத்தில் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு கம்பளத்தையும் விரித்து விடுகின்றது. தென்னிலங்கை கட்சிகளை தாயகத்தில் நுழைய விட்டுவிட்டு அதனை அகற்றுவது என்பது இலகுவான ஒன்றல்ல.

நான்காவது செயற்படா அரசியல் - பெரும்பாலான தமிழ் கட்சிகள் இந்நிலையிலேயே உள்ளன. இத்தரப்பினர் வெறும்; கதைகளோடு நிற்பவர்களே தவிர நடைமுறையில் எதுவும் செய்வதில்லை. அரசியலில் “தலைவர்கள் முன்னே! மக்கள் பின்னே” என்பார்கள். ஆனால் இங்கே மக்கள் முன்னே செல்கின்றனர். தலைவர்கள் பின்னே கூடவருவதில்லை. மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களிலும் இத்தரப்பினர் பெரியளவிற்கு பங்கேற்பதில்லை. இத்தரப்பினரை செயல்படு நிலைக்கு கொண்டு வர வேண்டியது அவசியமானதாகும்.

தமிழ்ச் சூழலில் நிலவும் இந்த அரசியல் காரணமாக தமிழரசியல், புறநெருக்கடிகளுக்கும் முகங் கொடுக்க முடியவில்லை. அக நெருக்கடிகளுக்கும் முகங் கொடுக்க முடியவில்லை. மறுபக்கத்தில் தமிழரசியலுக்கு வரலாறு தந்த வாய்ப்புகளையும் பயன்படுத்த முடியவில்லை.
தமிழரசியல் சந்திக்கும் புறநெருக்கடிகளில் முதன்மையானது தினந்தோறும் எதிர் நோக்கும் ஆக்கிரமிப்புகளாகும். நிலப்பறிப்பு, மொழிச் சிதைப்பு, கலாச்சாரப் புறக்கணிப்பு, பொருளாதார ஆக்கிரமிப்பு என இவ் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்பில் அரச நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைந்த தன்மை காணப்படுகின்றது. தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு சிலரே இவ் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கின்றனர். ஏனைய தரப்புக்கள் பார்வையாளர்களே உள்ளனர். ஒரே நேரத்தில் பல ஆக்கிரமிப்புகள் நிகழும் போது அதற்கு முகம் கொடுக்கும் ஒரு சிலருக்கும் கடின தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

இந்த ஆக்கிரமிப்புக்கு தமிழ் மக்கள் மட்டும் முகம் கொடுக்க முடியாது. அதற்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்று தேவை. ஐ.நா போன்ற சர்வதேச நிறுவனங்கள் மூலம் இத்தகைய பாதுகாப்பு செயல் முறைகளுக்கு ஒழுங்கு செய்யலாம். ஆனால் சர்வதேச மட்டத்தில் இவ்விவகாரத்தை பேசு பொருள் ஆக்காமல் இதனை மேற்கொள்ள முடியாது. இதற்கு ஒருங்கிணைந்த அரசியல் குரல் தேவை. அரசியல் சக்திகள் துண்டு துண்டாக செயல்படும்போது ஒருங்கிணைந்த குரலை கட்டி எழுப்ப முடியாது. நிலப்பறிப்பு கிழக்கில் முற்றுப்பெற்று தற்போது வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டமும் வவுனியா வடக்குப் பிரதேசமும் இதன் தற்போதைய இலக்கு. இந்தப் பிரதேசங்கள் பறிபோகுமானால் எதிர்காலத்தில் தமிழர் தாயகம் என்று கூறுவதற்கு எதுவும் மிஞ்சாது.
புறநெருக்கடிகளில் இரண்டாவது பொருளாதார நெருக்கடியை காரணமாக காட்டி சிறீலங்கா அரசு இன பிரச்சினையை நிலவிரிப்புக்குள் தள்ள முயற்சிப்பதாகும். பொருளாதார நெருக்கடியின் ஆணிவேர் இனப் பிரச்சினைதான் என்பது சிறீலங்கா அரசிற்கும் தெரியும். சர்வதேச சக்திகளுக்கம் தெரியும். இனப்பிரச்சனை தீர்வுக்கு பெருந்தேசிய வாதம் தடையாக இருக்கும் என்பதால், இதனை தவிர்ப்பதற்கு இருதரப்பும் முயற்சிக்கின்றன. தமிழ்ச் சூழலில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமையும் நிலவிரிப்புக்குள் தள்ளுவதை சுலபப்டுத்தி உள்ளது.

இன்று பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை அரசினை அதிக அளவில் பாதுகாப்பது இந்தோ - பசுபிக் மூலோபாயக் காரர்களான அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், இந்தியாவும் தான். ஜப்பான் போன்ற பாரிஸ் அணி நாடுகள் மேற்குலக அணிக்குள் அடங்கும். இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியம, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன அதிகளவில் மேற்குலகில் செல்வாக்கின் கீழேயே உள்ளன. தமிழ்ச் சூழலில் ஒருங்கிணைந்த அரசியல் நிலவுமானால் இந்த நிதி நிறுவனங்களுக்கும், வல்லரசுககளுக்கும் இன பிரச்சினை தீர்வுக்கு உத்தரவாதம் வழங்காமல் பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டாம் என்கின்ற அழுத்தங்களை கொடுக்க முடியும்.

சர்வதேச நாணய நிதியம் மறைமுகமாக இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுக்கின்றது. படையினரின் எண்ணிக்கையை 1ஃ3 குறைப்பதும் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளில் ஒன்றாகும். இந்த இலக்கை அடைவதற்கு இனப்பிரச்சினையை தீர்ப்பது அவசியமானதாகும். நாட்டில் ஒரு பகுதி மக்களை புறக்கணித்துக்கொண்டு பொருளாதார நெருக்கடியை ஒருபோதும் தீர்க்க முடியாது.

மூன்றாவது படையினரின் கெடுபிடிகளாகும். வெளித்தோற்றத்தில் போரில்லா நிலை தோன்றினாலும் தமிழ் மக்கள் திறந்தவெளி சிறைக்குள்ளேயே தள்ளப்பட்டுள்ளனர். வன்னி பிரதேசங்களில் இக்கெடுபிடிகள் அதிகம். இந்த கெடுபிடிகளினால் புலம்பெயர் தரப்பின் நிதி உதவிகளை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் போராளிகள் தொடர் கண்காணிப்புக்குள்ளேயே விடப்பட்டுள்ளனர். முகநூலில் பதிவேற்றியமைக்காக முன்னாள் போராளி ஒருவர் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும் உள்ளது.

நான்காவது தென்னிலங்கை கட்சிகளின் படையெடுப்பாகும். ஜே.வி.பி உட்பட்ட போரை முன்னின்று நடாத்திய தென்னிலங்கை கட்சிகள் தற்போது தமிழ் பிரதேசங்களில் கூடாரம் அடிக்க தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் நோக்கம் தமிழ் பிரதேசங்களில் தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்பட்ட அரசியலை நிலை நிறுத்துவதே! தமிழ் பிரதேசங்களில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாத நிலை பல இடைவெளிகளை உருவாக்குகின்றது. இந்த இடைவெளிக்கூடாக இக்கட்சிகள் நுழையப் பார்க்கின்றன.

ஜே.வி.பி தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான விடயங்களில் மிகவும் மோசமாக நடந்து கொண்ட கட்சியாகும். வடக்கு - கிழக்கைப் பிரித்து தமிழ் மக்களின் கூட்டிருப்பை, கூட்டுரிமையை, கூட்டடையாளத்தை இல்லாமல் செய்தது. சுனாமி பொதுக் கட்டமைப்பை அகற்றியதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வயிற்றிலடித்தது. இருபத்தாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்து தமிழ் மக்கள் பலரைக் கொன்று குவித்தது. இத்தகைய கொடிய செயல்களுக்கு பொறுப்பு கூறவோ, தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கவோ இன்னமும் அது தயாராக இல்லை. அது எந்த முகத்துடன் தமிழ் மக்களிடம் வருகின்றது என்பது அதற்குத்தான் வெளிச்சம்.

ஐந்தாவது அரசுசார்பற்ற நிறுவனங்களின் ஊடுருவல்களாகும். தமிழ் மக்களை மூளைச்சலவை செய்வதற்கென்றே இவை களமிறக்கப்பட்டுள்ளன. “புதிதாக சிந்திப்போம்” என்ற வார்த்தை பிரயோகங்களை மேடை ஏற்ற பார்க்கின்றன. குறிப்பாக இளைஞர்களிடையே பணத்தையும் இவை அள்ளி வீசுகின்றன. ஆடம்பர விடுதிகளில் ஏழை இளைஞர்களை அழைத்து களிப்பூட்டி தம்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றன. பயிற்சி பட்டறை, கருத்தரங்கள் என்ற பெயர்களில் மூளைச்சலைவை செய்யப்படுகின்றது. இங்கு மூளைச்சலவையின் நோக்கம் தமிழத்தேசியத்தை நீக்கம் செய்வதே!
ஆறாவது அபிவிருத்தி அரசியல் என்ற சுலோகம் முன்னெடுக்கப்படுகின்றமையாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுலோகத்தை முன்னெடுப்பதில் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார். அவரது அடுத்தடுத்த வடக்கு விஜயம் இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். தமிழ் இளைஞர்கள் அரசியலில் பெரியளவுக்கு நாட்டம் கொள்ளவில்லை. 40 வயதிற்கு மேற்பட்டவர்களே நாட்டம் கொள்கின்றனர் என பொன்மொழிகளைவேறு அவர் உதிர்த்து விடுகின்றார்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த அபிவிருத்தி அரசியல் பைத்தியம் முத்திவிட்டது எனலாம். முஸ்லிம்கள் அரசுடன் இணைந்து இருந்ததினாலேயே அபிவிருத்தி கண்டனர். நாமும் அதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற விதை அங்கு விதைக்கப்படுகின்றது. பிள்ளையானின் கட்சி இதில் தீவிரமாக உள்ளது. அக்கட்சியின் மூலதனம் முஸ்லிம் எதிர்ப்பும், வடக்கு எதிர்ப்பும் தான். இந்த இரண்டும் கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை.

முஸ்லிம் முன்னோடிகள் பலர் உரிமை அரசியலில் தமிழ் மக்கள் எங்கேயோ நிக்கின்றனர். நாம் பின்தங்கி நிற்கின்றோம் எனக் கூறத் தொடங்கியுள்ளனர். தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர். அவர்கள் எவ்வாறாவது தங்களுக்கான அரசியல் தீர்வை பெற்று விடுவார்கள். தாங்கள் தான் அடிமைகளாக இருக்க வேண்டிய நிலைமை தொடரும் என்கின்றனர்.

அடுத்த வாரம் புவிசார, பூகோள நெருக்கடிகளைப் பார்ப்போம்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 12.06.2026

Read More