
posted 7th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மதுபானச்சாலை திறப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்
அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்வத்தை கிராமத்தில் புதிதாக மதுபானச்சாலை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நேற்று முன் தினம் புதன்கிழமை (05) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்வத்தை பூர்வீக தமிழ் கிராமத்தை அழிக்க திட்டமிட்ட சதி, மதுபானச்சாலையை அமைக்க நாம் இடம் தர மாட்டோம் உட்பட பல்வேறு வாசகங்கள் ஏந்திய பதாதைகளை சுமந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன் தினம் காலை மல்வத்தை பிரதான வீதியிலுள்ள நாற்சந்தியில் பேரணியாக வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம் பெறும் செய்தியை அறிந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து வந்து கலந்து கொண்டதுடன், மக்களின் மகஜரையும் பெற்றுக்கொண்டார்.
அத்தருணத்தில் சமுக செயற்பாட்டாளர்களான வெ. ஜெயச்சந்திரன், பொன். நடராசன், துரையப்பா காத்தவராயன், து. கஜேந்திரன், தங்கவேல் கண்ணன், கே. சுரேஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் தயாரித்த மகஜர் அம்பாறை அரசாங்க அதிபர், சம்மாந்துறை பிரதேச செயலாளர், பொலீஸ் பொறுப்பதிகாரி, மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் போன்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாறை நகரில் ஐந்து மதுபானச்சாலைகள் இருக்கின்ற நிலையில் மல்வத்தை கிராமத்தில் மதுபானச்சாலை எதற்கு என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)