
posted 10th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மண்ணம்பிட்டியில் பஸ் விபத்து
70 பயணிகளுடன் அக்கறைப்பற்று நோக்கி வந்த பேருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர், 40 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஞாயிறு (09) இரவு 7.30 மணியளவில் பொலநறுவை மன்னம்பிட்டி பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலநறுவை கதுரவெல நகரத்தில் இருந்து அக்கறைப்பற்று நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது. சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 70 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது. இதில் ஒரு பெண், 10 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்தனர் 40 பேர் மீட்கப்பட்டனர்.
பொலிஸாரும் கடற்படையினரும் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன. காணாமல் போன பலர் மீட்கப்பட்டதுடன், ஆற்றில் பாய்ந்த பேருந்தும் வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்துக் குறித்து மண்ணம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)