
posted 30th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி திறப்பு
(ஏ.எல்.எம்.சலீம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதான கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்துக்கான புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் இடவசதிகளின்றி ஓட்டமாவடி நகரில் பழைய கட்டடத்தில் இருந்த பிரதேச செயலக கட்டடம் இடம்மாற்றப்பட்டு காகி நகரில் உள்ள விசாலமான இடத்தில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழாவில் சுற்றாடல்துறை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீரலி உட்பட பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

விபத்து
(ஏ.எல்.எம்.சலீம்)
அம்பாந்தோட்டையிலிருந்து காரைதீவு மாளிகைக்காட்டிற்கு மீன் ஏற்றி கொண்டு வந்த வட்டா ரக லொறி காரைதீவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சனிக்கிழமை (29) அதிகாலை மூன்று மணி அளவில் காரைதீவு பெரிய பாலத்தில் இடம் பெற்றது.
பாலத்தின் கம்பிகளை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்த லொறியில் இருந்து மீன் பெட்டிகள் சிதறுண்டன. தெய்வாதீனமாக சாரதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.
காரைதீவு பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஐவர் கைது
(ஏ.எல்.எம்.சலீம்)
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பிரகாரம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 20 இற்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)