
posted 19th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
படு கேவலமான அரசியல் நிலையில் தமிழர் முன்னாள் எம்.பி. ஆவேசம்!
“தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இத்தனை ஆயிரம் உயிரிழப்புக்களை பறிகொடுத்து எத்தனையோ இழப்புகளை சந்தித்த நாம், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு பாரதப் பிரதமரைக் கடிதம் மூலம் கோரும் படுகேவலமான அரசியல் நிலமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். இதற்காகவா நாம் போராடினோம்?” இவ்வாறு, மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் ஆக்ரோஷத்துடன் கூறி கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை (15) மாலை நடைபெற்ற “தராக்கி” ஈழத்தமிழ் முன்னோடி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், சுவிஸ் இலங்கை சிவராம் ஞாபகர்த்த மன்றமும் இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி டி. சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கியதாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர் சபீனா சோம சுந்திரத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமான விழாவில் நூல் அறிமுகத்தினை மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின் நிகழ்த்தினார்.
நூல் வெளியீட்டின் போது மட்டக்களப்பு மாவட்ட மூத்த ஊடகவியலாளர் இ. பாக்கியராசா, அமரர் சிவராமின் பாரியார் பவானி சிவராமுக்கு முதல் சிறப்புப் பிரதியை வழங்கினார்.
விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரிய நேத்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“எமது விடுதலைப்போராட்டத்தின் முக்கிய இலக்கையும், நோக்கத்தையும் மழங்கடிப்பதற்கும், திசை திருப்புவதற்கும் நம்மில் சிலர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
நாம் கோரி நிற்கும் வடகிழக்கு இணைந்த அரசியல் தீர்வைப் புறந்தள்ளியும், நம் உரிமை அரசியலை விட்டு விலகியும் செயற்பட இத்தகையவர்கள் முனைந்துள்ளமை விசனிக்கத்தக்கதாகும்.
1987 ஜுலையில் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமான 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல் நடத்துமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இன்று நம்மவர் சிலர் பாரதப் பிரதமர் மோடியைக் கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.
படுகேவலமான இந்த அரசியல் நிலைப்பாட்டுக்காகவா இத்தனை இழப்புக்களையும் சந்தித்து நாம் போராடிவந்தோம்?
தமிழ் மக்கள் சமஷ்டியைக் கைவிட்டு விட்டார்களா? எனும் கேள்வி எழும் அளவுக்கு, புரியாணி கேட்டுப் போராடிய நம்மை, பிஸ்கட்டே போதும் என்ற நிலைக்கு இவர்கள் எம்மைத் தள்ளியுள்ளதுடன், எழுத்திலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமரர் சிவராம் இன்றிருந்தால் இதற்குத் தக்க பாடம் கற்பித்திருப்பார்” என்றார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உரையாற்றுகையில்,
“தமிழ்த்தேசியப் பணிகளை ஊடகத்துறை மூலம் முன்னெடுத்துவந்த அமரர் தராக்கி சிவராம், கள நிலமைகளைக் கணிப்பிட்டு தமது எழுத்துக்கள் மூலம் மக்களுக்குத் தெளிவூட்டினார்.
இதுபோல் உலகத் தமிழினத்தை அவரது எழுத்துக்கள் மூலம் புரியச் செய்தார்.. மக்கள் சிந்திக்காது மந்தைகளாக இருக்க வேண்டுமென நினைத்தவர்களே இத்தகையவர்கள் அழிக்கப்பட்டதற்குக் காரணமானவர்களாவர்.
தேச விடுதலைக்காக உழைத்த அமரர் சிவராம் பூகோள ஆதிக்கப் போட்டியை நன்கு புரிந்து அத்தகைய நிகழ்ச்சி நிரல்களுக்கு இடமளிக்காதவாறு, பூகோள ஆதிக்க சக்திகளுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்தார்.
எனவே, அவரது இலட்சியத்தை நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் உணர்வுகளைத் தட்டியெழுப்ப வேண்டும்” எனக் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)