
posted 22nd July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை
ஜனாதிபதி போடும் பிச்சையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதை அவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என இரா. சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் பொய்களையே கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு காலத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் தரப்பட்டிருந்தால் நாடு இன்று இந்த நெருக்கடியினைச் சந்தித்து இருக்காது.
இவை அனைத்தும் நன்கு தெரிந்த ஒருவரே தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார்.
அண்மையில் தமிழ்த் தலைவர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி பலவாறான கருத்துக்களை கூறியிருந்தார்.
நாம் அவருக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றோம். நாடு ஜனாதிபதிக்குச் சொந்தமானது அல்ல. ஒரு இன மக்களுக்கு மட்டும் சொந்தமானது மட்டுமல்ல.
இந்த நாட்டில் அரசியல் உரிமை என்பது தமிழ் மக்களுக்கும் உரித்தான விடயமாகும். நான் விரும்பியதைத் தான் தருவேன் என ஜனாதிபதி கூறுவாராக இருந்தால் விரைவில் நீங்களும் நிராகரிக்கப்படுவீர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். விரைவில் நீங்களும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் போடும் பிச்சையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதையும் ஜனாதிபதி நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறாமல், அவர்களைப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கான சிறந்த இடத்தினை வழங்காவிட்டால் இந்த நாடு ஒரு சிறந்த இடத்திற்கு வர முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அரசாங்கம் எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும், எந்தச் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் தமிழர்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தராவிட்டால் இந்த நாடு சிறந்த இடத்திற்கு வரமுடியாதென்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த விடயத்தில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரைக்கும் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என ஜனாதிபதி நினைக்கக் கூடாது. அவ்வாறு தமிழர்களை ஏமாற்ற ஜனாதிபதி நினைப்பாராக இருந்தால் அவரும் விரைவில் அழிந்து போவார் என்பதையே நாம் இங்கே கூற விரும்புகின்றோம்.
ஏனெனில், தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் வரையில் நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரப்படுவது என்பது சாத்தியமில்லை. பாரிய முதலீடுகள் வருவது தடைப்பட்டால் கடன்களை மீளச் செலுத்துவது மிகவும் கடியமான விடமாகும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)