
posted 31st July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஜனாதிபதியை நம்புகிறோம்
“எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்திலிருந்து நாடு வங்குரோத்து அடையும் என்று எதிராளிகள் சொல்கிறார்கள். ஆனால் செப்ரெம்பர் மாதத்தில் இருந்து தான் நாடு பாரிய அபிவிருத்தியை காணவிருக்கின்றது. ஜனாதிபதியை நாங்கள் பூரணமாக நம்புகின்றோம்” இவ்வாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் காரைதீவில், காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம் பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், உதவி பிரதேச செயலாளர் பி. பார்த்தீபன், கணக்காளர் ஜனாபா தெஸ்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி. இராஜகுலேந்திரன் , திணைக்களங்களின் பிரதிநிதிகள், முப்படைகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்,
எதிர்த்தரப்பினர் கடந்த நான்காம் மாசம் பட்டினிச்சாவு வரும் என்றார்கள். இப்பொழுது செப்ரெம்பரில் நாடு வங்குரோத்து அடையும் என்கிறார்கள். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு எமது ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பி வருகின்றார். அவர் ஒரு செயல் வீரன். அடுத்த நான்கு வருட காலத்திற்கு நாட்டுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் கிடைத்திருக்கின்றது. கூடவே 3.5 பில்லியன் டொலர் கிடைக்க இருக்கின்றது.
எனவே, நாட்டு மக்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. செப்ரெம்பர் மாதத்தில் இருந்து அபிவிருத்தி சார் செயற்பாடுகளை நாங்கள் சாதாரணமாக மேற்கொள்ள முடியும். 2024 க்குரிய பட்ஜெட் மிகவும் சிறப்பாக அமைய இருக்கின்றது-என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)