
posted 7th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சைவ சமய பிரசங்க மரபு தொடரவேண்டும்
சகல சைவ ஆலயங்களிலும் சமய பிரசங்க மரபு தொடரவேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறு. திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இந்து மாமன்றம் சார்பில் அவர் நேற்று (06) ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில், சகல சைவ ஆலயங்களிலும் திருவிழாக் காலங்களிலும், வெள்ளிக் கிழமைகளிலும் சமய பிரசங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேண வேண்டும். எமது இளம் சிறார்களின் நன்மை கருதியும், ஆலயம் வரும் அடியவர்களை அறவழிப்படுத்துவதற்கும் மிக அத்தியாவசியமானது சமய நற்சிந்தனை மற்றும் சைவப் பிரசங்கங்கள். தற்போது ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை சமயப் பிரசங்க மரபு அருகி வருவதைக் காணலாம்.
இந்த நிலையை மாற்றுவதற்கு ஆலய கடமைகளில் ஈடுபடும் சிவாச்சாரியார்கள், ஆலயங்களை நிர்வகிக்கும் அறங்காவலர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். நல்லை நகர் நாவலர் பெருமான் காலம் தொடக்கம் சைவ ஆலயங்களில் பேணப்பட்டு வந்த பிரசங்கமரபு தற்போது ஒரு சில ஆலயங்களில் மட்டும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏனைய ஆலயங்களில் இந்த மரபு கைவிடப்பட்டுள்ளது. ஆலயங்களில் நடைபெற்ற புராண இதிகாச சொற்பொழிவுகளும், சமய விளக்கங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியது ஆலய நிர்வாகிகளின் தலையாய கடமையாகும்.
வெறும் கட்டடங்களாலும் கிரியைகளோடு கூடிய விழாக்களால் மட்டும் மக்களிடம் சமய சிந்தனைகளை பரப்ப முடியாது. எனவே, இவ்விடயம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இன்றைய சூழலில் எமது இளம் சமூகம் சமய விடயங்களை நன்முறையில் அறியாத நிலை தொடர்கிறது. கடவுள் நம்பிக்கை அற்ற ஒரு சமூகம் உருவாகி வருகிறது. அதனால் கொலை, களவு, போதை, தற்கொலை என அவலம் தொடர்கிறது. சமூகத்தை ஆற்றுப்படுத்த வேண்டிய பிரதான கடமை ஆலயங்களுக்கு உண்டு. ஆலயங்கள் சமூகம் சார்ந்த பணிகளை தம்மால் இயன்றவரை செய்ய முன்வரவேண்டும் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)